செவ்வாய், 25 டிசம்பர், 2018

32 தொகுதி திமுக வேட்பாளர் பட்டியல் ஆய்வு..

மின்னம்பலம் : “திமுகவையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் இயக்கி வருவது ஓ.எம்.ஜி. குழுமம் என்பது திமுகவில் உள்ளவர்களுக்கு தெரியும். இதுநாள் வரை சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த ஓ.எம்.ஜி. குழுமம் இப்போது டெல்லியில் அலுவலகம் ஒன்றை தொடங்கியிருக்கிறது. டெல்லி அலுவலகத்துக்கான மாத செலவு மட்டும் 8 லட்சம் ஆகிறதாம்.
கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தில் இருந்து ஸ்பெஷலாக ஒரு அசைன்மென்ட் எடுத்து செய்யப்பட்டு வருகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடந்த அத்தனை தேர்தல்களின் விபரங்களையும் முதலில் கையில் எடுத்திருக்கிறது ஓ.எம்.ஜி. குரூப். மின்னணு வாக்குப்பதிவு வந்த பிறகு பதிவான வாக்குகள் தனியாகவும், வாக்கு சீட்டு இருந்தபோது பதிவான வாக்குகள் தனியாகவும் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியிலும் யாரெல்லாம் போட்டியிட்டார்கள்... எந்த கூட்டணியில் போட்டியிட்டார்கள்... எவ்வளவு வாக்குகள் வாங்கினார்கள் என்ற விபரங்களை சேகரித்திருக்கிறது. போட்டியிட்ட வேட்பாளரின் பின்புலம் என்னவாக இருந்தது? எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுவரை லிஸ்ட் எடுத்திருக்கிறார்கள். பிறகு, ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள்? இதில் ஆண் பெண் எவ்வளவு? அரசு ஊழியர்கள் எவ்வளவு பேர், சொந்தத் தொழில் செய்பவர்கள் எவ்வளவு பேர், கூலித் தொழிலாளிகள் எவ்வளவு பேர், ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், அந்த சாதி உட்பிரிவில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், இதேபோல் ஒவ்வொரு மதத்திலும், அதன் உட்பிரிவிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது வரை தனித்தனியாகப் பிரித்து விபரங்களை சேகரித்து இருக்கிறார்கள். இந்த டேட்டாவை கையில் வைத்துக் கொண்டுதான் அடுத்த வேலையை தொடங்கியிருக்கிறது ஓ.எம்.ஜி. குரூப்.

பழைய டேட்டாவை கையில் வைத்துக் கொண்டு, 32 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு, ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பேரை செலக்ட் செய்திருக்கிறார்கள். இந்த 3 பேர் என்பது தொகுதியில் இருக்கும் அறிமுகம், படிப்பு, பண வசதி, சாதி வாக்குகள், குடும்பத்துக்கு இருக்கக் கூடிய நற்பெயர் அல்லது கெட்ட பெயர், வழக்கு விவரம் என அத்தனையும் அலசி ஆராய்ந்து கடந்த தேர்தல்களையும் ஒப்பிட்டுதான் தொகுதிக்கு 3 பேரை தேர்வு செய்திருக்கிறார்களாம். இந்த பட்டியலைத் தயார் செய்வதற்காக பெரும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரை சில தொகுதிகளில் இவர்தான் வேட்பாளர் என்பது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு மத்திய சென்னையில் தயாநிதி மாறன், நீலகிரி ஆ.ராசா என பட்டியல் நீளும். இப்படியான தொகுதிகளுக்கும் கூட, அவர்களோடு சேர்த்து மாற்று வேட்பாளர்களும் ஓ.எம்.ஜி. குரூப் கொடுத்த பட்டியலில் இருக்கிறது. இந்த பட்டியல் தற்போது ஸ்டாலின் கைக்குப் போயிருக்கிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி நிற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் கையில் 32 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கையில் இருக்கிறது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதே நேரம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் அப்டேட் ஆகியிருந்தது. லொக்கேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது.
செல்வோம் சொல்வோம் வெல்வோம்
“மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தலை நோக்கியதாகவே இந்தக் கூட்டம் அமைந்திருந்தது. ’மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம்... மக்கள் மனதை வெல்வோம்..’ என்பதைத்தான் இன்றைய கூட்டத்தின் தாரக மந்திரமாக முன்மொழிந்திருக்கிறார் ஸ்டாலின். அடுத்து அவர் சொன்னது, ‘கிராம சபை கூட்டம் நடத்துவதுதான் நாம் மக்களிடம் எளிதாக செல்லும் வழியாக இருக்கும். 12,560 கிராமங்கள் தமிழகம் முழுக்க இருக்கின்றன. இந்த கிராமங்களில் எல்லாம் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் தலைமைக் கழகம் சார்பாக அணி நிர்வாகிகள் வருவார்கள். கிராம சபை கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் வீடுகளுக்கும் செல்ல வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 12, 560 கிராமங்களிலும் நமது கிராம சபை கூட்டம் நடந்திருக்க வேண்டும். அதுக்கான வேலைகளை உடனே ஆரம்பிக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதற்கான பட்டியல் கூட்டம் முடிந்தவுடனேயே மாவட்டச் செயலாளர்களுக்கு தரப்பட்டது.
‘கிராம சபை கூட்டம் என்பது கமல் ஏற்கெனவே நடத்திட்டு இருக்காரு... இதுல நாம என்ன புதுசா பண்ணிட முடியும்?’ என்ற கேள்வியும் திமுகவினர் மத்தியில் எழாமல் இல்லை. இது ஸ்டாலின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ‘அவங்க ஒரு கிராமத்தை செலக்ட் பண்ணி மாசத்துக்கு ஒரு கூட்டம் நடத்துறாங்க. நாம எல்லா கிராமங்களிலும் கூட்டம் நடத்தப் போறோம். அதுதான் புதுசு... அதுதான் வித்தியாசம்’ என்று சொன்னாராம் ஸ்டாலின்”

கருத்துகள் இல்லை: