ஞாயிறு, 23 டிசம்பர், 2018

தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை .. விவாதம் விடியோ


மாலைமலர் : தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும், பாடலுக்கு உரிமை கோருவது சட்டவிரோதம் என்று இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 தயாரிப்பாளர்கள் வழக்கு திரைப்பட தயாரிப்பாளர் செல்வகுமார், அன்பு செல்வன், ஜெபஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏதேனும் திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும் போது இயக்குனரை தீர்மானிக்கின்றனர். இயக்குனரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்யப்படும். கடந்த 80 ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் சினிமா துறையில் நடந்து வருகின்றது.

ஊதியம் பெற்று கொண்டு பணியாற்றும் இசைமைப்பாளர்கள் தங்கள் பணிக்கு எந்த உரிமையும் கோர முடியாது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர் தான். இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கியுள்ளது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்களின் காப்புரிமை தனக்கே சொந்தம் என கூறி வருகிறார். இளையராஜாவை இசையமைப்பாளராக நியமித்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் காப்புரிமையை அவருக்கு வழங்கி, எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் அவர் இசையமைத்த பாடல்கள் மீது உரிமை கோருவது சட்டவிரோதமானது.

இதை அனுமதித்தால் படத்தின் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், இயக்குனர் ஆகியோரும் காப்புரிமை கோர கூடும். பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் எதுவும் கிடைக்காத நிலை உருவாகும்.
எனவே திரைப்படத்தை தயாரிப்பாளர்களே அப்படத்தின் இடம்பெற்றிருக்கும் காட்சி, பாடல், என அனைத்திற்கும் முழுமையான உரிமையானவர்கள் என அறிவிக்க வேண்டும்.
 தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். தங்களது படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மூலம் இளையராஜா சம்பாதித்த பணம் குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: