செவ்வாய், 25 டிசம்பர், 2018

சாலையோரம் வசிப்பவர்கள் எத்தனைப்பேர்?: அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

tamilthehindu :தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அறிக்கை அளிக்கும் படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் – ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலை ஓரங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாத மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவதாகக் கூறி, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, விற்பனை வரி, சேவை வரி என வரிகளை வசூலிக்கும் அரசுவீடில்லா ஏழை மக்களுக்கு மார்ச் மாதம் வரை தற்காலிகமாக தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் பனியின் தாக்கத்திலிருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கம்பளி போர்வைகள் வழங்கவேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுபோல் வீடில்லாமல் உள்ள மக்களின் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்,  இந்த மனுவுக்கு ஜனவரி 4-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: