செவ்வாய், 25 டிசம்பர், 2018

கீழ்வெண்மணிப் படுகொலை .. 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரோடு தீயில் ... குற்றவாளிகள் அனைவரும் விடுதலையானார்கள்

Karthick Ramasamy : வரலாற்றைத் திரிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வரை காவிகள் வென்றுகொண்டே இருப்பார்கள். கீழ் வெண்மணிப் படுகொலை நடந்து 38 நாட்களில் அறிஞர் அண்ணா இறந்துவிட்டார். அந்த சமயத்தில் தஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பலம் பொருந்திய பண்ணையார்களாக பார்ப்பனர்களும் இருந்தனர். ஒரு பக்கம் காங்கிரஸ் பண்ணையார்கள் இன்னொருபுறம் கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் என்று நடந்த பிரச்சனை அது. ஆனால் இங்கு அதை திமுக vs பட்டியலின மக்கள் என்று திரிக்க ஒரு கூட்டம் அலைகிறது. அதற்கு பிறகு நில உச்ச வரம்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. குளித்தலையில் கலைஞரே முன்னின்று போராட்டம் நடத்தி பண்ணையார்களிடம் இருந்து நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட காரணமாயிருந்தார். வரலாற்றில் நடந்த அத்தனை கொடூரங்களையும் திமுகவின் மீது சுமத்த ஒரு கூட்டம் எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

Sundar P :1968-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 25-ஆம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்டம் நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்டது ஒரு படுகொலை நிகழ்வு.
இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 வேளாண் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது பாசன வசதி மிகுந்த. விளைநிலங்கள் அதிக விளைச்சலை தருபவையாக இருந்தது. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் இருந்தது..
தஞ்சையில் இருந்த நிலக்கிழார்கள் விவசாயத் தொழிலாளர்களை அடிமையாக நடத்திவந்தனர்.
தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம் அது.

சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. மிக குறைந்த ஊதியம் வழங்க பட்டது.
1960 ஆம் ஆண்டு இந்திய சீனா போரால் நாடெங்கும் ஏற்பட்ட பஞ்சம் தஞ்சை விவசாயக் கூலித் தொழிலாளர்களை பெரிதும் வாட்டியது.
கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும், பி. சீனிவாசராவும். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து ஒரு விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள்.
இதற்குப் போட்டியாக நிலச்சுவான்தார்களும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவும் “கிசான் போலீஸ்” என்ற அடியாட்கள் அமைப்பை உருவாக்கினர். .
கூலி உயர்வு கேட்டார்கள் விவசாயிகள்.
நில உடைமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை...
பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த அதே நேரத்தில், கீழ்வெண்மணியை சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது.
1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள்.
நாட்டுத் துப்பாக்கிகளுடன் இந்த கிசான் போலீஸ் எனும் அடியாட்கள் படை கீழ்வெண்மணிக்குள் புகுந்து, கண்ணில் பட்ட விவசாயிகளையெல்லாம் தாக்கினார்கள்,
விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள்.
நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட மக்கள் பயந்து ஓடினார்கள்.
பெண்களும் குழந்தைகளும் "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள்.
எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைக்கலம் புகுந்தனர்.
அடியாட்கள் குடிசையின் கதவைப் பூட்டிவிட்டு குடிசைக்குத் தீ வைத்தனர். குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்
எல்லாம் முடிந்த பிறகு, போலீஸ் வந்தது.
106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது.
நிலச்சுவான்தார்கள் மீது வழக்கு போடப்பட்டது.
ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் என்பதை நம்ப முடியாது …" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று தீர்ப்பு சொல்லப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.

கருத்துகள் இல்லை: