வெள்ளி, 28 டிசம்பர், 2018

பெரிய பெருமாள் சிலைப் பாறையின் பயணமும், பொதுமக்கள் எதிர்ப்பும்!

Sugumaran Govindarasu : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி
அருகில் பெரிய
அளவிலான பெருமாள் சிலை செய்ய மலையை உடைத்துப் பெரிய பாறையை வாகனத்தில் எடுத்துச் செல்வது பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாயின. இதனால்,
பொதுமக்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
சென்ற 25.12.2018 அன்று இதுகுறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம் செஞ்சி வந்திருந்தார். அவருடன் நானும், சேலம் வழக்கறிஞர் யுவராஜ், சுதாகர் ஆகியோரும் சென்றோம். விரிவாக ஆய்வு செய்த பின்னர் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழக்கறிஞர் பொ.இரத்தினம் தயாரித்த நான்கு பக்கங்கள் கொண்ட விரிவான மனுவினை மின்னஞ்சல் மூலம் அனுப்பினோம். அம்மனுவில் கூடுதல் தகவல்களைச் சேர்த்து வழக்கறிஞர் பொ.இரத்தினம் தமிழக தலைமைச் செயலரை நேரில் சந்தித்து அளிக்க உள்ளார்.
பெங்களூரில் உள்ள கோயில் ஒன்றுக்குப் பெருமாள் சிலை செய்ய திட்டமிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு மலையை செயற்கைகோள் மூலம் கண்டறிந்துள்ளனர். 108 அடி உயரம், 420 டன் எடையுடைய பெருமாள் சிலை செய்ய மலையை உடைத்துப் பெரும் பாறையைப் பெங்களூருக்கு எடுத்துச் செல்கின்றனர். இதற்கு 250 டயர்கள் கொண்ட பெரிய வாகனத்தைப் புனேயில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
முதல் கட்டமாக 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் முகம் மட்டும் செதுக்கப்பட்ட பெரிய பாறையை எடுத்துச் செல்கின்றனர். இந்த மலையை உடைக்க மாவட்ட நிர்வாகம் எவ்வாறு அனுமதி அளித்தது என்பது புதிராகவே உள்ளது. மேலும், சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை போன்றவற்றில் அனுமதிப் பெறப்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை. (படம் 1: பெருமாள் முகம் கொண்ட பெரிய பாறை, படம் 2, 3: செட்டிக்குளத்தில் உடைக்கப்பட்ட மலை).
இதற்குச் செல்லும் வழியெல்லாம் சாலையோரத்தில் இருக்கும் வீடுகள், கடைகள் என எல்லாவற்றையும் இடித்துப் பாறையை எடுத்துச் செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை என்ற ஊரில் இருபுறமும் இருக்கும் வீடுகள், கடைகளை அக்கோயில் அறக்காட்டளை முகவர்கள் இடித்துள்ளனர். இதற்கு அரசிடமிருந்தோ, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தோ எவ்வித அனுமதியும் பெறவில்லை. முகவர்களே சிலருக்கு மட்டும் சிறிய தொகையை இழப்பீடாகக் கொடுத்துவிட்டு இடித்துள்ளனர். பலருக்கு ஒப்புக் கொண்ட தொகையை தரவில்லை.
வெள்ளிமேடுபேட்டை வணிகர் சங்கப் பொறுப்பாளரான குபேரன் (வயது 54) த/பெ. கருப்பையா கவுண்டர் என்பவரது இரண்டு மாடிக் கொண்ட வீடு முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. எதிர்பாராத நிலையில் பாறையின் ஒரு பக்கம் மோதி இடிந்துள்ளது. கீழே அவரது கடையும், மேலே குடியிருந்த இரண்டு மாடி வீடும் இடிந்துவிட்டது (படம்: 4). அவருக்கு அறக்கட்டளை முகர்வர்கள் இழப்பீடாக ரூபாய் 13.5 லட்சம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால், ரூபாய் 10.5 மட்டுமே கொடுத்துள்ளனர். வீட்டையும், வீடு, கடையில் இருந்த பொருட்களையும் இழந்து நிர்கதியாக நிற்கிறார் குபேரன்.
அதேபோல், செஞ்சியில் சமையா (வயது 53) க/பெ. வேணு என்ற சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியின் வீடு முற்றிலும் இடித்துப் போயுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது குடிசை வீடு தீ விபத்தில் எரிந்துப் போயுள்ளது. சிலரின் உதவியால் அதே இடத்தில் கான்கிரீட் வீடு கட்டியுள்ளார். அவருக்கு அப்பகுதியில் உள்ள அதிமுக கவுன்சிலர் கண்ணன் என்பவர் மூலம் ரூபாய் 2 லட்சம் தருவதாக அறக்கட்டளை முகவர்கள் உறுதி அளித்துள்ளனர். உடனடியாக ரூபாய் 15,000 என இரண்டு காசோலைகளைக் கொடுத்துள்ளனர். ஆனால், வங்கிக்குச் சென்று கேட்டபோது அந்தக் கணக்கில் பணம் இல்லை என காசோலைகளைத் திருப்பித் தந்துள்ளனர். மீண்டும் கவுன்சிலர் கண்ணன் தலையீட்டால் ரூபாய் 1 லட்சம் பணமாக கொடுத்துள்ளனர். மீதித் தொகை இதுவரையில் கொடுக்கவில்லை. அந்தப் பெண்மணி இடிந்த வீட்டின் முன்பு நின்று அழுதக் காட்சி துயரமாக இருந்தது.
தற்பொது இந்தப் பெரிய பாறையை சுமந்து செல்லும் வாகனம் செஞ்சியில் இருந்து சேத்பட் சாலையில் சென்று கொண்டிருந்த போது பொதுமக்கள் எதிர்ப்பால் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செஞ்சியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட போது நாளொன்றுக்கு ரூபாய் 40,000 பெருமாளை வழிபட வந்த பொதுமக்களிடம் இருந்து வசூலாகியுள்ளது.
அரசு அதிகாரிகளின் பங்களிப்பு இன்றி அறக்கட்டளை முகவர்கள் நேரடியாக சட்டவிரோதமாக இந்தப் பாறையைக் கொண்டு செல்ல அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். வீடு, கடைகளை அரசு அதிகாரிகளின் பங்களிப்பு இல்லாமல் இடித்து வருகின்றனர். இதனால், அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்து போய் அறக்கட்டளை நிர்வாகிகள், முகவர்களின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணைப் போகிறது.
வழக்கறிஞர் பொ.இரத்தினம் 'இந்தப் பாறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அந்தப் பாறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் புத்தர் சிலையை வடித்து அங்கேயே நிறுவ வேண்டும்' என மனுவில் கோரியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
கடவுள் நம்பிக்கைக் கொண்ட பலரும் இந்தப் பாறையை உடைத்து எடுத்துச் செல்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதுவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது எனவும் கூறினர். இதனை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களும் நடந்துள்ளன.
Sugumaran govindarasu    Makkal Urimai Koottamaippu, Puducherry

கருத்துகள் இல்லை: