சனி, 20 அக்டோபர், 2018

வைரமுத்து .. சின்மயி ... திமுகவின் மௌனத்தால் வைரமுத்து வருத்தம்?

நக்கீரன் ; தன் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களுக்கு திமுக தரப்பில் ஆதரவு கிடைக்காதது கவிஞர் வைரமுத்துவுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. என்  மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். காத்திருக்கிறேன் என வைரமுத்து கூறிவிட்டார்.>ஆனாலும், அவர் மீது தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகளான ஹேமாமாலினியும் வைரமுத்துக்கு எதிராக டிவிட் போட இந்த விவகாரம் டிவிட்டரில் பற்றி எரிகிறது.
ஆனால், திரையுலகில் யாரும் வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசவில்லை. குறிப்பாக, திமுக தரப்பில் இருந்தும் வைரமுத்துவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை. கலைஞர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தவர் வைரமுத்து. ஆனால், அவரின் மறைவிற்கு பின் ஸ்டாலின் அவரை பெரிதாக கண்டுகொள்வதில்லை எனக்கூறப்படுகிறது.

ஆண்டாள் விவகாரம் பூதாகரம் ஆன போது அவருக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதுபோல், தற்போதும் தனக்கு ஆதரவாக அறிக்கை வெளியாகும் என வைரமுத்து எதிர்பார்த்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. ஆண்டாள் விவகாரம் பொதுவானது என்பதால் அறிக்கை வெளியிட்டோம். ஆனால், பாலியல் புகார்கள் என்பது அவரது சொந்த விவகாரம். எனவே, தேவையில்லாமல் அவருக்கு ஆதரவு அளித்து பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என ஸ்டாலின் கருதுவதாக தெரிகிறது.

எனவே, கலைஞர் இருந்தால் இப்படி என்னை கைவிட்டிருப்பாரா? தளபதியிடம் சொல்லுங்கள் என திமுக தரப்பிடம் கவிஞர் தூதுவிட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழியும் மீ டூ விவகாரத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<

கருத்துகள் இல்லை: