செவ்வாய், 16 அக்டோபர், 2018

கடந்த 50 ஆண்டுகளில் கெட்டுப்போன உணவு பழக்கம்.. நோய்களின் ஆரம்பம்?

Savithri Kannan : பல்லாயிரம் ஆண்டுகால நம் பாரம்பரியத்தில் நிகழ்ந்திராத
மிகப் பெரிய மாற்றம் நம் உணவுக் கலாச்சாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் நடந்துவிட்டது...!
எத்தனையெத்தனையோ அந்நியப் படையெடுப்புகளை இந்தியா கண்டுள்ளது.ஆனால், எந்த அந்நிய படையெடுப்புகளாலும் நம் உணவுப் பண்பாடு மாற்றம் காணவில்லை! குறிப்பாகச் சொல்வேண்டுமென்றால், இஸ்லாமியர்கள் நம்மை ஆட்சி செய்த போதும் சரி,வெள்ளையர்கள் ஆட்சி செய்த போதும் சரி அவர்கள் உணவுக் கலாச்சாரம் அவர்களுக்கானது, நம் உணவுக் கலாசாரம் நமக்கானது என்றே இந்திய மக்கள் தம் உணவுப் பழக்க வழக்கங்களை விட்டுவிடாமல் தொடந்தனர்!
# ஆனால், நம் சுதந்திர இந்தியாவில் 1950 களில் மைதாவும்,வெள்ளைச் சீனியும் புகுத்தப்பட்ட போது முதல் இருபதாண்டுகளில் பெரும்பாலான மக்கள் அதைச்சீண்டவேஇல்லை.கருப்பட்டியும்,வெள்ளமும்,தேனும் தான் நாம் இனிப்புக்காக உட்கொண்டோம்!
# 1960 களில் ஒட்டு ரக வீரிய அரிசிகளும்,ரசாயன உரங்களும், பூச்சிக் கொள்ளி மருந்துகளும் நம் விவசாயிகளிடம் வலிந்து திணிக்கப்பட்டதிலிருந்து தான் நம் உணவு கலாச்சாரத்தில் நோய்க் கூறுகள் இடம் பெறத் தொடங்கின!
இன்று உலக உணவு தினம் என்பதால் மட்டுமல்ல,

சாவித்திரி கண்ணன் என்ற சமரசமற்ற பத்திரிகையாளன் எப்படி சமையல் துறைக்குள் காலடி பதித்தான் என்ற சுய விளக்கத்தையும் மனம் திறந்து பேசவே இந்த பதிவை எழுதுகிறேன். நானே மிகத் தாமதமாகத் தான் உணவு குறித்த விழிப்புணர்வு பெற்றேன்.ஆனால், நான் வாழ அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் உண்வு குறித்த விழிப்புணர்வை எப்படியாவது செய்தே தீர வேண்டும் என்று தவியாய் தவிக்கிறேன்.எனவே தொடர்ந்து படியுங்கள்..!
நம்மை நேரடியாக ஆட்சி செய்து அடிமைபடுத்த இயலாமல் போனதற்கு மாற்றாக, அந்நிய நாட்டார் செய்த சூழ்ச்சி தான் மேற்படி இரண்டு சம்பவங்களும்!
இன்று நாம் வெளி நாட்டில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான டன் ரசாயன உரங்களையும், பூச்சிக் கொள்ளி ,களைக் கொள்ளிமருந்துகளையும்இறக்குமதி செய்து இந்திய பொருளாதாரத்தை மட்டுமல்ல, இந்திய மண்ணையும், மக்கள் ஆரோக்கியத்தையும் ஒரு சேர அழித்துக் கொண்டிருக்கிறோம்!
40,50 ஆண்டுகளுக்கு முன் நம்மிடையேகாணப்பட்ட வீர உணர்வு, அறச்சீற்றம், பழி பாவங்களுக்கான அச்சம்,பிறர் நலம் பேணும் பண்பு, விருந்தோம்பல்.. போன்றவை இன்று நம்மிடமிருந்து விடுபட்டது
எப்படி ?
எல்லாம் நாம் உட்கொள்ளூம் நச்சுணவு நம்மிடையே ஏற்படுத்திய மாற்றங்கள் தான்!
ஆம்! உணவு தான் ! நாம் உட்கொள்ளும் உணவு தான்
நம் உடலையும, அதன் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியத்தின் மூலம் நம் மன உணர்வுகளையும், ஒழுக்கத்தையும்செயல்பாடுகளையும்கட்டமைக்கிறது!.மொத்தத்தில் உணவு என்பது நம் உடலின் அங்கமாக மட்டும் ஆவதில்லை,அதுவே நம் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் அடிப்படையாகிறது!
உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மைதா என்ற கழிவானது.இன்று பரோட்டாவாக,பல்வேறு இனிப்பு பண்டங்களாக..தமிழர் தம் வீட்டு விசேஷங்களில் ஒரு தவிர்க்க முடியாத உணவாகிப் போனது.! இன்று பரோட்டா கடைகளும், பேக்கரிகளும் குக்கிராமங்கள் வரை பரவி வியாபித்து நிற்கும் மர்மமென்ன? மைதாவை தமிழர்களின் தேசிய உணவாக்கி விட்டார்களா?
எள்,கடலை,தேங்காய்,இழுப்பை,வேம்பு,ஆமணக்கு இவற்றிலிருந்து ஆரோக்கியமாக செக்கில் ஆட்டிய எண்ணெய்யை பயன்படுத்திய தேசம் இன்று வெளி நாட்டிலிருந்து பெட்ரோலிய குரூட் ஆயிலை இறக்குமதி செய்து சுத்தப்படுத்தி ரீவைண்ட் ஆயில் என உட்கொள்ளுவது எதனால்?
நம் கலாச்சாரத்தில் இருந்து இன்று இல்லாமல் போன பாரம்பரிய அரிசிகள்,சிறுதானியங்கள்,எண்ணெய் வித்துகள்,காய்கறிகள்,மலர்கள்,பழங்கள்....எத்தனையெத்தனை?
அவற்றின் ருசி,உன்னதச் சுவை,மணம்,மருத்துவ குணங்கள் என்னென்ன? அவற்றின் பெயர் கூட இன்று பலருக்குத் தெரியாமல் போனதே...?
அவற்றை மீட்டெடுத்து பயன்பாட்டுக்குகொண்டுவரும் உன்னத பணியில் ஈடுபட்டிருப்பவர்களோடு ஒரு சிறுதுளியளவாவது என்னை இணைத்துக் கொள்ளும் முயற்சியாகத் தான் நான் தற்போது உணவுத் துறையில் இயங்கிக் கொண்டுள்ளேன்!
நம் உணவுக் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்,ஆபத்துகளையும்,அதிலிருந்து மீள வேண்டிய தேவைகளையும் விளக்க இந்த ஒரு பதிவு போதாது! அடுத்த பதிவில் சொல்கிறேன்.

கருத்துகள் இல்லை: