சனி, 17 ஜூன், 2017

ஆரிய படையெடுப்பு .. DNA .டி என் ஏ ஆதாரம் நிருபிக்கப்பட்டது .. இந்து பத்திரிக்கை கட்டுரை

thetimestamil : இந்திய வரலாற்றில் ஆரியர்களின் வருகை இதுநாள் வரை கோட்பாடு அடிப்படையில் சொல்லப்பட்டு வந்தது. டிஎன்ஏ அடிப்படையிலான ஆய்வில் உலக அறிவியலாளர்கள் தற்போது இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழில்(ஜூன் 17, 2017) டோனி ஜோசப் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையிலிருந்து சில குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் மட்டும் இங்கே…
  • தந்தை வழியில் கடத்தப்படும் ’ஒய்’ குரோமோசோம்களைக் கொண்டு ஆரியர்களின் வருகையை அறிவியலாளர் நிரூபித்துள்ளனர். இதுநாள் வரை தாய் வழி எம்டி டிஎன்ஏக்களை வைத்துதான் ஆய்வு நடந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.
  • ஒய் டிஎன்ஏக்களுக்கும் எம்டி டிஎன்ஏக்களுக்கும் நேர் எதிரான ஆய்வு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. காரணம், வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.
  • ஒய் டிஎன்ஏக்களின் ஆய்வில் 17.5% இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் ஒற்றை உறவு வழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, ஐரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கிறார்கள்.

  • “வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன.  மேலும், பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ்.
  • ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று z282, z93. z282 பிரிவினர் ஐரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்து சென்றனர். z93 பிரிவினர் மத்திய ஆசியாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும் z93ன் மூன்று துணைபிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இமாலய பகுதிகளில் பரவினர்..
  • முந்தைய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு தகர்த்திருக்கிறது” என்கிறார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.
  • பீட்டர் அண்டர்ஹில்லுடன் இணைந்து டேவிட் போஸ்னிக் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவில் z93பிரிவினரின் பரவல் 4000லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினரின் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் சுட்டுகிறார்.
  • 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஊடகங்கள் ’ஆரிய – திராவிட பிரிவினை என்பது பொய்- ஆய்வு முடிவு’ என தவறான கோணத்தில் செய்தி வெளியிட்டதையும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் அப்படியான கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால். ஊடகங்கள் திரித்துள்ளன என்கிறார்.
  • இதுவரையிலான ஆய்வுகளில் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பங்களிலிருந்து பிரிந்த ஒரு பிரிவினர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று நிரூபித்திருந்தனர். அதாவது சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்கள் உயர்சாதியினராக அறியப்படுகின்றனர்.
  • கட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பிரிவினர் இங்கே வந்தனர். பிறகு 10 ஆயிரம் ஆண்டுகளில் தெற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் வந்தனர்.  பிறகு சிந்துவெளி சமவெளி மக்கள் (அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை; அவர்கள் முதலில் வந்தவர்கள்தான் அதாவது பூர்வகுடிகள் என்கிற கோட்பாடு சொல்லப்படுகிறது) 4 ஆயிரம் ஆண்டுகளில் ஆரியர்கள் வந்தனர். அதன் பிறகு வணிகம் செய்யவந்தவர்கள் என வரலாறு முழுக்க பலரும் வந்துகொண்டிருக்கின்றனர் என்கிறார்கள். நாமெல்லாம் வந்தேறிகள் என்று முடிக்கிறார்.
முழுக்கட்டுரையை இங்கே படிக்கலாம்…
நன்றி: தி இந்து.

கருத்துகள் இல்லை: