செவ்வாய், 13 ஜூன், 2017

ஆ.நடராஜன் காலமானார் .. 4 தடவை திமுக சட்டமன்ற உறுப்பினர் ..தொ,மு.ச பேரவை தலைவர் .

சென்னை: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ.நடராஜன் மறைவுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் முன்னாள் தலைவராகவும், மாநிலக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய பேரூர் ஆ.நடராஜன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவிற்கு கருணாநிதி சார்பிலும், திமுகவின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் செயலாளராக, தலைவராக, மாநிலக் குழுத் தலைவராக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, தொழிலாளர் உரிமைகளை காப்பாற்றுவதற்காக போராடிய பேரூர் ஆ.நடராஜன், கழகம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது இருமுறையும், ஆளுங்கட்சியாக இருந்த போது இருமுறையும், பேரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு அரும் பணிகளை ஆற்றியவர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, மாநி்ல அளவில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர். தொழிலாளர்கள் நலனுக்காக தினசரி சிந்தித்து வாழ்ந்து வந்த ஒரு மாபெரும் தூணை இழந்து, இன்றைக்கு திமுக கழகம் தவிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தொழிலாளர் தோழர்களுக்கும், கழக நண்பர்களுக்கும் பேரூர் நடராஜனின் மறைவு பேரிழப்பாக அமைந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.tamiloneindia

கருத்துகள் இல்லை: