ஞாயிறு, 11 ஜூன், 2017

நிதின் கத்காரி : பாஜகவுககு தமிழ்நாடு மட்டுமே பிரச்சனையாக இருக்கிறது.

சென்னை: பாரதிய ஜனதாவிற்கு தமிழகம் தான் பிரச்சினையாக உள்ளது என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இத்தகைய திட்டங்களால் அடித்தட்டு மக்கள் எவ்வித பலனையும் பெறவில்லை என்று காங்கிரஸ், இடதுசாரி மற்றும் இதர எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது மூன்றாண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. பாஜகவின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் விதமாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகள் விளக்க கூட்டம், சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி,
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நிதின் கட்கரி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக வளர்ந்துள்ளது. நமக்கு டெல்லியோ அல்லது வேறு மாநிலமோ பிரச்சினையாக இல்லை. பாஜகவிற்கு தமிழகம் தான் பிரச்சினையாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாஜக எம்பிகள் அதிகளவில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் மிகமிக குறைந்த அளவில் ஒரே ஒரு எம்பிதான் இருக்கிறார். அதனால் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி கூற முடியாத நிலை உள்ளது என்றார். tamiloneindia

கருத்துகள் இல்லை: