செவ்வாய், 13 ஜூன், 2017

அதிமுக எம் எல் ஏ சரவணன் : நான் அவனில்லை ... அந்த விடியோவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை

அதிமுக எம்எல்ஏக்கள் பேரம் பேசி பணம் பெற்றதாக வெளியான
வீடியோவுக்கும், எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை’ என மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக நேற்று வீடியோ பதிவு ஒன்று வெளியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது: அந்த வீடியோவில் வந்த முகமும், பேச்சும் நிச்சயமாக என்னுடையதில்லை. அந்த இடம் எதுவென்றே எனக்கு தெரியவில்லை. ஏதோ மார்பிங் செய்து என் முகத்தை மட்டும் வைத்து யாரோ பேசின குரலுக்கு என்னை ஒப்பிட்டு இருக்கலாம்.
5 நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் எடப்பாடி அணியைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா எம்எல்ஏவை நேரில் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. உடனே நான் எடப்பாடி அணியில் இணைந்துவிட்டதாக புரளியை கிளப்பினர். அதன் பின்னணியில் சசிகலா அணியும், எடப்பாடி அணியும் இருந்தன. தற்போது எனக்கு துளியும் சம்பந்தமே இல்லாத வீடியோவை ஒளிபரப்பி என்னை மட்டுமில்லாது அதிமுகவையும் அசிங்கப்படுத்தி விட்டனர். மற்ற எம்எல்ஏக்களைப் பற்றி நான் எதற்காக பேச வேண்டும். அது எனக்கு தேவையும் இல்லை.

சசிகலா அணி சதி
இந்த எம்எல்ஏ பதவி ஜெயலலிதா கொடுத்தது. பணம் சம்பாதிப்பது முக்கியமாக இருந்தால் நான் கூவத்தூர் விடுதியில் இருந்து ஏன் தப்பி வர வேண்டும். கூவத்தூரில் இருந்து தப்பி வந்த நான், கடத்தலுக்கு காரணமான சசிகலா மீதே துணிச்சலாக புகார் தெரிவித்தேன். அன்று முதலே என்னை அரசியலைவிட்டு விரட்ட சசிகலாவும், அவரது அணியினரும் திட்டமிட்டு சதி செய்கின்றனர். தினசரி யாராவது ஒருவர் பேசி, என்னை அந்த அணிக்கு இழுக்க முயற்சி செய்கின்றனர். நான் அதற்கு உடன்படாததால் பொய்யான வீடியோவையும் பல்வேறு தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இதை சாதாரணமாக விடமாட்டேன். சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார்.  tamithehindu

கருத்துகள் இல்லை: