புதன், 14 ஜூன், 2017

எஸ்.எஸ்.சிவசங்கர். :தோழர் சுந்தரம் அவர்களுக்கு செவ்வணக்கம் !

"சு". இந்த ஒற்றையெழுத்து ஒரு காலத்தில் தமிழகக் காவல்துறைக்கு சிம்ம
சொப்பனம். அந்த ஒற்றை எழுத்து தமிழ்தேசியப் போராட்டத்தின் முக்கிய எழுத்து. தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரோடு தோளோடு தோள் நின்று போராடியவர் தோழர் சு. தோழர் சுந்தரம், "சு" என்றே இயக்கத் தோழர்களால் குறிப்பிடப்படுவார். தோழர் தமிழரசன் மறைவிற்கு பிறகு 'பெரியவர்' என்றும் அழைக்கப்பட்டார்.
தோழர் தமிழரசன், தமிழ்நாடு விடுதலையை முன்னிறுத்தி போராட்டக் களம் அமைத்தவர். வர்க்க ஒழிப்பிற்கும், சாதி ஒழிப்பிற்கும் குரல் கொடுத்தவர். அவரை தமிழ்நாடறியும். அவரது உற்றத் தோழர் சுந்தரம். இவரை வெளி உலகிற்கு தெரியாது. இயக்கத் தோழர்களும், உளவுத்துறையினருமே நன்கறிவார்கள் இவரை.
ரகசியம் என்பதை விட ரகசியமான மனிதர்.
தோழர் தமிழரசன், கடலூர் மாவட்டம் மதகளிர்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர். சுந்தரம், கடலூர் மாவட்டம் நத்தமலை கிராமத்தை சேர்ந்தவர். ஆனால் இருவருக்கும் அரியலூர் மாவட்ட முந்திரிக்காடுகள் தான் தாய் வீடு. வளமானப் பகுதியில் பிறந்தவர்கள், இந்தப் பொட்டல்காட்டின் விடுதலைக்கு பாடுப்பட்டவர்கள். பழைய உடையார்பாளையம் தாலுக்காவை அணு அணுவாக அறிந்தவர்கள்.
மிக ஒல்லியான தேகம். நான்கு முழ வேட்டி, கசங்கிய சட்டை. கிராமத்து ஏழை விவசாயி போல ஒரு அப்பாவித் தோற்றம். பேசினால் தான் வலுவானக் கொள்கைக்கு சொந்தக்காரர் என்பது தெரியும். பழைய சைக்கிளில் தான் எங்கும் வலம் வருவார். இயக்கத் தோழர்களைத் தவிர்த்து யாரும் எளிதில் அடையாளம் காண இயலாது. கடைவீதிகளில் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருப்பார். இது தான் தோழர் சுந்தரம்.
வல்லம் கிராமத்தில், அரசு முந்திரிக்காட்டுப் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் பக்கம் நின்று வழி நடத்தினார் தோழர் தமிழரசன். அப்போது பின்புலமாக இருந்தவர் தோழர் சுந்தரம். எதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என திட்டமிடுவதில் சுந்தரம் வல்லவர். வல்லம் போராட்டத்தில் அரசு ஒடுக்குமுறையை மீறி, போராட்டம் வெற்றி கண்டு ஒரு புரட்சியே நடந்தது.
தீவிரவாதப் பாதை வெற்றிக் காணாது என்ற எண்ணம் இருந்த நேரத்தில், வல்லம் போராட்ட வெற்றி, தோழர் தமிழரசனின் மக்கள் திரள் போராட்ட யுக்தியின் வெற்றியாக அமைந்தது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் தோழர் சு. அடுத்தக் கட்டமாக தமிழ்நாடு விடுதலையை முன்னிறுத்தி போராட்டப் பாதை கண்டார்கள். அதில் மருதையாற்று பால குண்டு வெடிப்பில், ரயில் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் போராட்டம் சற்றே பின்னடைவை கண்டது.
அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்டத்திற்கு பணம் திரட்டும் பணி நடந்தது. அதில் ஒரு முயற்சியே பொன்பரப்பி வங்கி நடவடிக்கை. இதை முன்னமே அறிந்த காவல்துறை, முற்றுகையிட்டு தாக்க தோழர் தமிழரசன் மரணமுற்றார். அதற்கு பிறகான காலக்கட்டத்தில் தோழர் சுந்தரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்தார்.
அரியலூர் மாவட்டத்தை பெரம்பலூரோடு இணைத்த ஜெயலலிதா அரசின் நடவடிக்கையை கண்டித்து நடந்தப் போராட்டத்தில் ஒரு வாரம் திருச்சி சிறையில் இருந்தேன். அங்கு தான் தோழர் சுந்தரம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மென்மையான, எளிமையான மனிதர். மாவோயிசக் கொள்கையில் சில தெளிவுகளை ஏற்படுத்தினார் எனக்கு.
பிந்தைய காலக்கட்டத்தில் சிறையில் இருந்து அவர் விடுதலையாகி வந்த போது, நான் சட்டமன்ற உறுப்பினராகி இருந்தேன். இரண்டு பொது அலுவல்களுக்காக தகவல் அனுப்பினார். பணி முடிந்த பிறகு நன்றி சொல்லி அனுப்பினார். தனிப்பட்ட, சொந்த அலுவல்களுக்காக யாரையும் அணுகுபவர் கிடையாது. அந்தத் தேவையும் அவருக்கு கிடையாது.
இடையில் வல்லம் கிராமத்தில் இரண்டு தமிழ் தேசிய விடுதலைக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட உயிர்பலிகள் நடந்து, ஆண்டிமடம் பகுதியே பதற்றத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தது. இரண்டு குழுக்களுக்கும் அறிவுரை சொல்லிப் பார்த்தார் தோழர் சுந்தரம். அவர்கள் மோதலை நிறுத்தவில்லை. காவல்துறை மோதலை வேடிக்கைப் பார்த்தது.
ஒரு நாள் நள்ளிரவு ஆண்டிமடம் காவல்நிலையத்தில் துப்பாக்கி கொள்ளை நடந்தது. காவல்துறை களத்தில் குதித்து இரண்டு குழுவை சேர்ந்தவர்களையும் கைது செய்தது. காவல்துறை நடவடிக்கையால், குழு மோதல் முடிவுக்கு வந்தது. பின்னர் தான் தெரிந்தது, இது தோழர் சுந்தரம் அவர்களின் திசைதிருப்பும் துல்லியத் திட்டம் என்பது.
பின்னர் வயது முதிர்வால் தோழர் சு தளர்ந்த போது, சொந்த ஊருக்கு வர சொல்லி உறவினர்கள் அழைத்திருக்கிறார்கள். மறுத்து விட்டு, தனது போராட்ட பூமியான அரியலூர் மாவட்டத்திலேயே தங்கி விட்டார். செந்துறைப் பகுதியில் பழைய தோழர்களது வயல்வெளி, பொது இடங்களில் இரவு தங்கலை வைத்துக் கொண்டிருக்கிறார். சில நாட்கள் ராயம்புரத்தில் உள்ள அண்ணன் சந்திரசேகர் உணவு விடுதியில் காலை உணவை சாப்பிட்டிருக்கிறார். தோழரை சந்திக்க ஒரு நாள் வருகிறேன் என்று சொல்லி அனுப்பியிருந்தேன்.
எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. நேற்றைய முன் தினம் தோழர் சுந்தரம் மறைவெய்தி விட்டார். கோப்பிலியங்குடிகாட்டில் இறந்தவரது உடலை கொண்டு வரும் போது, ஆனந்தவாடியில் மறித்து, சிறிது நேரம் வைக்க சொல்லி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள் பொதுமக்கள். ஆனந்தவாடியில் பல நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். மக்கள் போராட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.
நேற்று முழுதும் பொன்பரப்பியில் உடல் வைக்கப்பட்டு அந்தப் பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இன்று சொந்த ஊரான நத்தமலையில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது அவரது பூவுடல். நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். தோழருக்கு நெருக்கமான இயக்கத் தோழர்கள் குவிந்திருந்தனர். காவல்துறையும் பெருமளவில். அவரது வாழ்க்கையை போலவே இறுதிநாளும் தோழர்களோடும், காவல்துறையினரோடும்.
தமிழ்மக்களையே தன் குடும்பமாக கருதி வாழ்ந்தவரின் புரட்சிப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்தப் பயணத்தை வேறு சில தோழர்கள் முன்னெடுப்பார்கள். மக்களுக்கானப் போரட்டம் தொடரும்.
# தோழர் சுந்தரம் அவர்களுக்கு செவ்வணக்கம் !
_எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை: