வெள்ளி, 16 ஜூன், 2017

லண்டன் தீ விபத்து.... தீவிரவாதிகளின் சதி? - தீவிரமாகும் விசாரணை

லண்டன் தீ விபத்து ம.நிவேதா லண்டன் தீ விபத்து ங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனின் மத்தியப் பகுதியிலுள்ளது லாண்கேஷ்டர் வெஸ்ட் எஸ்டேட். இங்கு கிரான்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் பற்றிய தீ சிறிது நேரத்திலேயே கட்டடம் முழுக்கப் பரவியதால், குடியிருப்புவாசிகளில் பலர் கட்டடத்தினுள் சிக்கிக் கொண்டனர். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். எனவே அதிகாலை ரம்ஜான் நோன்பு அனுசரிக்கும் முன் உணவு எடுத்துக்கொள்ள எழுந்திருந்தனர்.
அந்த நேரத்தில், தீ பற்றியதால் மற்றக் குடியிருப்புவாசிகளையும் எழுப்பி தப்ப வைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தீ முழுமையாகப் பற்றிக் கொண்டதால், கட்டடத்தின் உள்ளே பலரும் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளை மாடிகளின் ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்த பரிதாபக் காட்சிகளும் அரங்கேறின. மேலும் சிலர், வீட்டிலிருந்த துணிகளையே பாராசூட்டைப்போல் பயன்படுத்தி கட்டடத்தைவிட்டு தப்பினர். இந்தத் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், 18 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் கட்டடத்தின் உள்ளே சிக்கிக் கிடக்கும் 500-க்கும் மேற்பட்டோரின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
1974-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம் கடந்த ஆண்டில்தான் 90 கோடி ரூபாய் மதிப்பில் மறுபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை வசதிகள் குறித்து ஏற்கெனவே லண்டன் பத்திரிகைகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன. 24 தளங்களைக் கொண்டுள்ள இந்தக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து 2 நாள்களாக தீ எரிந்த நிலையில், இந்த 24 மாடி கட்டடம் எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் என்ற அபாய நிலையில் உள்ளது. தற்போது பாதுகாப்புக் கருதி அருகிலுள்ள கட்டடங்களில் இருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிக்கொண்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்தில் சிக்கி இறந்துபோனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று வரும் தகவல்கள் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது. இந்தநிலையில், 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11-வது மாடியிலிருந்து 70 வயது முதியவர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்களை அவர்களது உறவினர்கள் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக 08000961233 என்ற தொலைபேசி எண்ணைக் காவல் துறை அறிவித்துள்ளது.
லண்டன் தீ விபத்து
27 மாடிகளும் முழுமையாக எரிந்துபோனதால், அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்படுகிறது. எனவே, அந்தப் பகுதியில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. லண்டன் நகரம் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரப் பலமாக இருக்கும் சூழலில், இந்தத் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான விடை தற்போது வரை கிடைக்கவில்லை. விதியை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் உள்ள நிலையில், இது தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விபத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றக் கண்ணோட்டத்திலும் லண்டன் காவல்துறை விசாரணை செய்து வருகிறது! vikatan.com

கருத்துகள் இல்லை: