புதன், 18 ஜனவரி, 2017

மெரீனாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்படுகின்றனர் .. ஏராளமான மாணவர்களும் வந்து கொண்டிருக்கின்றார்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெகுண்டெழுந்துள்ள மாணவர்கள், இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு பகல் பாராது இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக அறவழியில் சென்று கொண்டிருந்த போராட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு திடீரென போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டனர். சாலையில் கூடியிருந்தவர்கள் மீது லத்தியால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் காவலர் மற்றும் போராட்டக்காரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசியதால் தடியடி நடத்தப்பட்டதாகவும், வேடிக்கை பார்க்க வந்தவர்களை அப்புறப்படுத்தும் போது லேசான தடியடி நடத்தியதாகவும் போலீசார் கூறுகின்றனர். அமைதியாக போராட்டம் நடத்தினால் காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்கும் என தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் காமராஜர் சாலைக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டத்தை தொடரலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மெரினாவுக்கு ஏராளமான இளைஞர்கள் படையெடுத்து வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: