வெள்ளி, 20 ஜனவரி, 2017

மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை இயங்காது

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:< தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டும் நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக் குழு சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு எங்கள் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது.


இதற்காக சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று பம்மலில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகளும் இயங்காது.

மேலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பள்ளி வாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களும் ஆதரவளிக்கும் நிலையில், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். tamilthehindu

கருத்துகள் இல்லை: