திங்கள், 16 ஜனவரி, 2017

இன்று காணும் பொங்கல் ..மெரினா கடற்கரை, திரையரங்கம்... பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு


பொங்கல் திருநாளின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல். குடும்பம் குடும்பமாக பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் தாங்கள் விரும்பும் இடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்று குடும்பத்தோடு உணவு சமைத்து உண்பார்கள்.
பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் முடிந்த அடுத்த நாளான இன்று, காணும் பொங்கல் பொதுமக்கள் அனைவரும் மெரினா கடற்கரை, அண்ணா உயிரியல் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.

இன்று காணும் பொங்கல் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்தப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவார்கள். கடற்கரை முழுவதும் பொதுமக்களின் கூட்டம் கட்டுங்கடங்காத அளவுக்கு இருக்கும். இதற்காக மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தற்காலிகமாக ஒரு காவல் கட்டுப்பாட்டு அறையும் காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கேளிக்கை பூங்காக்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவண்ணம் சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினாவில் உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையில் மணல் பரப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீதேறி நின்றபடி, 3 போலீசார் கூட்டத்தை கண்காணிப்பார்கள். கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இளைஞர்கள், குழந்தைகள் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கி விளையாடுவார்கள். அப்போது, அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுப்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும் கூட்டத்தைக் கண்காணிக்க குதிரைப்படை வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும் கடற்கரை மணலில் எளிதாகச் செல்லக்கூடிய வகையிலான 10 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்துப் போலீசார் சுற்றிவருவார்கள். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: