புதன், 18 ஜனவரி, 2017

6 மணிவரை கெடு விதித்த அலங்காநல்லூர் மக்கள்!


மின்னம்பலம்.காம் :இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 16-ஆம் தேதி போராட்டம் துவங்கியது. இன்று 3-வது நாளாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் முதல் நாள் இரவில் கலந்து கொண்டவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. மேலும் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழவதும் பரவியது. தமிழக தலைநகரான சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, அலங்காநல்லூர் கிராம மக்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இன்று மாலை 6 மணிக்குள் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். கிராம மக்கள் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் போராட்டத்தின் வீரியத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. என்றாலும் அரசுக்கு கெடு விதித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: