புதன், 18 ஜனவரி, 2017

அரியலூர் .. 16 வயது (தலித்) நந்தினி வன்புணர்வு கொலை ... இந்துமுன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கூட்டாளிகள் .. மூடி மறைக்கும் போலீஸ் ..

nanthiniதலித், எது செய்தாலும் யாரும் கேட்க நாதி கிடையாது. நாம் இந்து முன்னணி, போலீசார் நம்மை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள், பணத்தை விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியும். நாம பார்க்காத கோர்ட்டா, கேசா என்கிற காட்டுமிராண்டித்தனம்தான் நந்தினி படுகொலைக்கு காரணம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு விசனப்பட்டுள்ளது.
அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்த 16 வயது நந்தினி என்ற சிறுமியை இந்து முன்னணி ஒன்றியச்செயலாளர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து நிர்வாணமாக கீழமாளிகை கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். ஆறுமாத கர்ப்பத்தை, பெண்ணின் பிறப்புறுப்பை கிழித்து சிசுவை எடுத்து அந்த பெண்ணின் சுடிதாரில் வைத்து கொளுத்தியுள்ளனர். கடந்த 29-ம்தேதி மாலை காணாமல் போன நந்தினியின் உடல் 17 நாட்களுக்கு பிறகு பிணமாக அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீச மேலே வந்துள்ளது.

காணாமல் போன மறுநாளே 30-ம் தேதி நந்தினியின் தாயார் ராசக்கிளி இரும்புலி குறிச்சி காவல் நிலையத்தில் கீழ்மாளிகை இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீதுதான் சந்தேகம். அவன்தான் என்மகளை எங்கோ கடத்தி சென்று விட்டான் என புகார் மனு கொடுத்துள்ளார். போலீசார் பெயர் குறிப்பிடாமல் புகார் கொடுங்கள் என வாங்கி ”கேர்ள் மிஸ்ஸிங்” என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
4-ம் தேதி மணிகண்டனை அழைத்து விசாரித்து அனுப்பி விட்டது போலீசு. நந்தினியை மீட்க பி.எஸ்.பி, அந்த ஊர் இளைஞர்கள் மாவட்ட எஸ்.பியிடம் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர்தான் இதற்கு எல்லாம் மூளையாக செயல்படுபவர் அவரை அழைத்து விசாரியுங்கள்,பெண்ணை கண்டுபிடித்துவிடலாம் என புகார் மனு கொடுக்கின்றனர். அனைத்து கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கின்றனர்.
ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிக்கோ திவ்யன், பெண்ணின் தயார், பி.எஸ்பி. மற்றும் உறவினர்களை அழைத்து 8-ம் தேதி மாலை பேசுகிறார். உன் பெண் குளிக்காமல் இருக்கிறார் தெரியுமா என தாயாரைப் பார்த்து கேட்கிறார். அம்மா ராசக்கிளி, தெரியாது என்கிறார். நீ எல்லாம் அம்மாவே கிடையாது; ஆறுமாதம் கர்ப்பமாக இருக்கிறார், உன் பெண் என சொல்லியிருக்கிறார்.
ஜனவரி 15-ம் நந்தினி போஸ்ட்மார்டம் செய்ததில் குழந்தை இல்லை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். மணிகண்டனை அழைத்து விசாரித்து அனுப்பிய பிறகுதான் கொலை நடந்துள்ளது. போலீசார் முறையாக விசாரித்து இருந்தால் நந்தினியைக் காப்பாற்றி இருக்கலாம். இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை அழைத்து விசாரிக்ககூட முடியாது என இந்து முன்னணியின் பக்கம் அரியலூர் மாவட்ட போலீசு ஆரம்பம் முதலே உறுதியாக நிற்கிறது.
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் படுகொலையின் போது செந்துறையில் இரண்டு நாள் பேருந்து ஓடவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு தி.க கூட்டம் நடந்தபோது அதை நடத்த விடாமல் தடுத்தவன் இந்து முன்னணி மணிகண்டனும் அவனது ரவுடி கிரிமினல் கூட்டமும்தன். அராஜகம் செய்வதே அவனது வாடிக்கை என சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
நந்தினி 16 வயது, ஒன்பதாம் வகுப்பு படிப்பு, சித்தாள் வேலை, ஏழ்மையான குடும்பம், அப்பா கிடையாது அம்மாவும் கூலி, தலித், எது செய்தாலும் யாரும் கேட்க நாதி கிடையாது. நாம் இந்து முன்னணி, போலீசார் நம்மை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள், பணத்தை விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியும். நாம பார்க்காத கோர்ட்டா, கேசா என்கிற காட்டுமிராண்டித்தனம்தான் நந்தினி படுகொலைக்கு காரணம்.
பிணத்தை வாங்கு இல்லை என்றால் நாங்களே அடக்கம் செய்வோம் என போலீசு அதிக எண்ணிக்கையில் கும்பலாக சிறுகடம்பூர் கிராமத்திற்குள் சென்று, நந்தினியின் அக்காவிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளது. பிணத்தை வாங்குவதற்கு இன்று நண்பகல் 12 மணிவரை கெடு விதித்துள்ளது. சிறுகடம்பூர் இளைஞர்கள் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் நேரிடையாக பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இன்று அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.
நந்தினி காணாமல் போன 5-ம் நாளே மணிகண்டனை விசாரித்த பிறகும் நந்தினியை இருப்புலி குறிச்சி போலீசார் ஏன் மீட்கவில்லை?ஆறுமாதம் கர்ப்பம் சிசுவை பற்றி ஏன் விசாரணை நடத்தவில்லை?. பிணத்தை, கூட்டாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் எது? இந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராஜசேகரை கைது செய்தால்தான் பிணத்தை வாங்குவோம் என்று போராடுகிறார்கள் மக்கள். அதனால் இன்று வரை பிணம் அரியலூர் அரசு மருத்தவமனையில் உள்ளது.
ராஜசேகரை அழைத்து விசாரிக்க முடியாது என காவல்துறை உறுதியாக நிற்பது ஏன்?பொங்கல், ஜல்லிக்கட்டு சமயத்தில் இந்த பிரச்சினை வந்தால் அழுத்தி விடலாம் என போலீசார் இந்து முன்னணியோடு திட்டம் தீட்டி செயல்பட்டனரா?
இந்து முன்னணி மட்டுமல்ல, போலீசாரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். நந்தினியின் பிணத்தை நேர்மையான மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேதப்பரிசோதனை நடத்துவதுடன் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தினியின் பிணத்தை வாங்காமல் மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களின் போரட்டம் மட்டுமே இக்கோரிக்கையை நிறைவேற்றாது. அனைத்து அமைப்புக்களும் கட்சிகளும் இக்கோரிக்கைக்காக போராட வேண்டும். நந்தினியின் படுகொலைக்கு காரணமான அனைத்து இந்து முன்னணி கொலைக்குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அது நம் அனைவரின் போராட்டத்தின் மூலமே சாத்தியம். இல்லையெனில் இந்த மிருகங்கள் அடுத்த நந்தினியை தேடிச்செல்லும்.
தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் முயற்சி தொடங்கி விட்டது. நாம் என்ன செய்யப் போகிறோம்? என்று ராஜு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  thetimestamil

கருத்துகள் இல்லை: