புதன், 18 ஜனவரி, 2017

1500 போலீஸ் புடை சூழ சசிகலா எம்ஜியார் சிலைக்கு அஞ்சலி !


எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, பாதுகாப்பு அளிக்க, நேற்று, 1,500 போலீசார் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்வைத்து நடந்த, இந்த அராஜகத்தால், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக, புகார் தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆருக்கு நேற்று நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடான, சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து, நேற்று காலை, 10:35 மணிக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா புறப்பட்டார். ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்றார்.
வழியெங்கும் அவருக்கு வரவேற்பு அளிக்க, கட்சியினர் ஆட்களை அழைத்து வந்திருந்தனர். இரண்டு அடிக்கு, ஒரு போலீஸ் என, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.


கூடுதல் பாதுகாப்பு

சென்னையில் மொத்தம், 15 ஆயிரம் போலீசார் உள்ளனர். அவர்களில், 10 சதவீதம் பேர், அதாவது, 1,500 பேர் சசிகலாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், நேற்று ஈடுபடுத்தப்பட்டனர். போயஸ்
தோட்டத்தில் இருந்து, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வரை, வரிசையாக அவர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அரசியல் ரீதியாக, சசிகலா உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், இந்த குறுகிய துாரத்தை கடந்து செல்லும் அவருக்கு, 1,500 போலீசார் பாதுகாத்ததும், வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்தை தடை செய்ததும், பொதுமக்களைஎரிச்சலடைய செய்தது.

எம்.ஜி.ஆர்., விழாவை முடித்து, கட்சி அலுவலகத்தில் இருந்து, காலை, 11:20 மணிக்கு புறப்பட்ட சசிகலா, ராமாவரத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., தோட்டத்திற்கு சென்றார். அப்போதும், அவர் சென்ற வழியில், சாலை சந்திப்புகளில் வாகனங்கள் தடை செய்யப்பட்டன.
திடீர் மறியல்

இதன் காரணமாக, அண்ணா சாலை உட்பட, நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜெ., முதல்வராக இருந்த போது அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட, சசிகலாவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுவது ஏன் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அதே போல், ராமாவரம் நிகழ்ச்சியை முடித்து, அங்கிருந்து போயஸ் இல்லம் திரும்பிய போதும், சசிகலாவுக்காக முக்கிய சந்திப்புகளில், வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அவரது காருக்கு வழி விடப்பட்டது.ஒரு பக்கத்தில், சசிகலாவுக்காக இவ்வளவு கெடுபிடிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்திருந்த போலீசார், அதே போல், எம்.ஜி.ஆர்., சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்ததீபாவுக்கு, போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை. அதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், கடற்கரை சாலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர்., இல்லத்தில் 2 மணி நேரம் காத்திருந்த தீபா

சென்னை, தி.நகரில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு, தீபா சென்றார். ஆனால், காலை, 7:30 மணி வரை, நினைவு இல்லம் திறக்கப்படவில்லை. இதனால், தீபா ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். அங்கேயே காத்திருந்து, காலை, 8:00 மணிக்கு, இல்லம் திறக்கப்பட்டதும், அங்குள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, தீபா மாலை அணிவித்தார்.

காலை, 9:00 மணிக்கு, எம்.ஜி.ஆர்., சமாதிக்கு சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள், ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். அப்போது அங்கு, கடும் நெரிசல் ஏற்பட்டது. ஆதரவாளர்கள், அவரை சுற்றி நின்று கோஷமிட்டனர். மிகவும் சிரமப்பட்டு, தன் காருக்கு சென்றார். அவர் சிரமப்படுவதை கண்டதும், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். 

போலீசார் பாதுகாப்பு அளிக்காததை கண்டு கோபம் கொண்டனர். போலீசாரை கண்டித்து, எம்.ஜி.ஆர்., நினைவிடம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், கடற்கரை சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தி, கலைந்து போகச் செய்தனர். அரை மணி நேர மறியலால், அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

- நமது நிருபர் -   தினமலர்

கருத்துகள் இல்லை: