சனி, 21 ஜனவரி, 2017

அமெரிக்கா அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார். அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக தேர்வானார். 45வது அதிபர்: வெள்ளை மாளிகையில் இன்று(ஜன.,20) நடந்த பதவி ஏற்பு விழாவில் அமெரிக்காவின் 45- வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். துணை அதிபராக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 பதவியேற்பு: பதவி ஏற்பு விழாவில் இந்திய தூதர் நவ்ஜேத் சிங்ஷர்மா, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே அதிபராக டிரம்ப் பதவியேற்றார்.


பதவியேற்பு விழாவில் டிரம்ப் பேசியதாவது: * அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவது தான் எனது நோக்கம்
* அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்
 * எல்லையைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்
*அதிகாரம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்
* அமெரிக்கா எப்போதும் முதலிடத்தில் நிலைத்திருக்கும்
 * எனது அரசு எடுக்கும் அனைத்து முடிவும் மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும்
*இது பதவியேற்பு விழா அல்ல, மக்களுக்கான விழா. இவ்வாறு அவர் பேசினார்.
மோடி வாழ்த்து: அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‛அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு எனது வாழ்த்துகள். வரும் காலங்களில் அமெரிக்கா உங்கள் தலைமையில் பெரும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெற சேர்ந்து பணியாற்றுவோம்' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.  தினமலர்

கருத்துகள் இல்லை: