செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு: ஃபேஸ்புக், ட்விட்டர் ட்ரெண்டில் 'அலங்காநல்லூர்'

ஜல்லிக்கட்டு விவகாரம் வலுத்துள்ள நிலையில், இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூரும் பேசுபொருளாக ஆயிரக்கணக்கானோரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அரசியல், சாதி, மதங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னார்வலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்ததுடன் களத்திலும் குதித்துள்ளனர்.
நீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது. | அதன் விவரம்: உச்ச நீதிமன்றத் தடையால் இளைஞர்கள் எழுச்சி: 3 நாள்களில் 30 கிராமங்களில் ஜல்லிக்கட்டு |
குறிப்பாக, தமிழகத்தில் பரவலாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம் வலுப்பெற்றதற்கு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பதிவுகள் முக்கியக் காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில், அலங்காநல்லூரில் இன்று (திங்கள்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் முற்பட்டுள்ளனர். அங்கு போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் போராட்டத்தில் இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் #அலங்காநல்லூர் இன்று பிற்பகலில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. #alanganallur என்ற ஹேஷ்டேக் மூலம் ஆயிரக்கணக்கான கருத்துப் பதிவுகளும் புகைப்படங்களுடன் கூடிய நிகழ்நேரப் பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.
அலங்காநல்லூர் நிலவரம் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு விவகாரத்தின் அரசியல் பின்னணி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம், பண்பாட்டு - கலாச்சார நடைமுறைகள், விலங்குகள் நல அமைப்புகள் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரக்கணக்கான கருத்துகள் பதியப்பட்டு வருவதால், இந்திய அளவில் இன்று சமூக வலைதளத்தின் பேசுபொருளாக ஜல்லிக்கட்டும் அலங்காநல்லூரும் திகழ்கின்றன.
இணைப்புகள்:

கருத்துகள் இல்லை: