வெள்ளி, 20 ஜனவரி, 2017

எழுத்தாளர் லக்ஷ்மி சரவனகுமார் சாகித்திய அகடெமி பரிசை திருப்பி கொடுக்கிறார் .. ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ..

LakshmiSaravanakumarஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றாததைக் கண்டித்து சாகித்ய அகாதெமி சார்பில் வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை திருப்பிக் கொடுக்கப் போவதாக எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அறிவித்துள்ளார்.
"கானகன்' நாவலுக்காக 2016 -ஆம் ஆண்டில் யுவபுரஸ்கார் விருது லஷ்மி சரவணகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதையை அவர் திருப்பிக் கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பது: தமிழ்ச் சமூகம் தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்னைகளுக்காக சிறு சிறு குழுக்களாக மக்கள் போராடினாலும், அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டன.

தற்போது மொத்த தமிழ் சமூகமும் திரண்டு தம் உரிமைக்காக குரல் கொடுப்பது தற்செயலாக நடந்தது இல்லை. இது வெறுமனே ஜல்லிக்கட்டு பிரச்னைக்கான போராட்டமும் இல்லை. தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம் என்ற அழுத்தத்தில் வெளிப்பட்டிருக்கும் கோபம். ஜல்லிக்கட்டுக்கு உடனே அனுமதியளிக்க அவசரச் சட்டம் இயற்றவும், இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டாவைத் தடை செய்யவும் வலியுறுத்துவதுடன், வஞ்சிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை (ஜன.19) மாலைக்குள் சாதகமான ஒரு பதில் கிடைக்காதபட்சத்தில், யுவபுரஸ்கார் விருதை வெள்ளிக்கிழமை (ஜன.20) காலை 11 மணிக்கு சென்னையில் இருக்கும் சாகித்ய அகாதெமி அலுவலகத்தில் திரும்பத் தந்துவிடுவேன்.
இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் எனும் சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. அது வெற்றிகரமாக நடக்கட்டும் என்று லஷ்மி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.தினமணி

கருத்துகள் இல்லை: