சனி, 21 ஜனவரி, 2017

சீமான் எச்சரிக்கை :டெல்லியில் நடப்பது ஜல்லிக்கட்டு நாடகம்தான்!

சீமான் ல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான வேலைகளும் களைகட்டத் தொடங்கியுள்ளன. ' டெல்லியில் நடக்கும் அரசியல் நாடகங்களை நான் நம்பவில்லை. பெயரளவுக்கு அனுமதியைக் கொடுக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது' என்கிறார் சீமான்.
தமிழகம் முழுவதும் ஐந்தாவது நாளாக, ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ' ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். வாடிவாசல் திறக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக் குதித்து வெளியே வரும்' என நம்பிக்கை தெரிவித்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் தமிழக ஆளுநர். "முதல்வர் பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமும் அதையொட்டி தற்போது நடக்கும் காட்சிகளும் தற்காலிக ஏற்பாட்டை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழக மக்களுக்கான நிரந்தரத் தீர்வை எட்டும் முயற்சியாக இதை நான் பார்க்கவில்லை" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் விவரித்தார்.
"உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டைக் கடந்து போய்விடுவார்கள் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். தற்போது ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். இதில் எழும் கேள்வி ஒன்றுதான். காவிரி மேலாண்மை வாரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்தனைக்கும் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. காவிரி விவகாரத்தில், வாரியத்தை அமைக்குமாறு நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி, 'நாங்களே சட்டம் இயற்றிக் கொள்கிறோம்' என உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. இதே அடிப்படையில், 'ஜல்லிக்கட்டு என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு. நாங்களே சட்டம் இயற்றி பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம்' என்று நீதிமன்றத்திற்குச் சொல்ல வேண்டியதுதானே? காவிரி விவகாரத்திலும், 'வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது' என்று இவர்கள் ஏன் சொல்லவில்லை? ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைத் தருவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்தத் தடைக்கு மிக முக்கியக் காரணமே காங்கிரஸ் அரசுதான். அப்போது இவர்களுடன் கூட்டணியில் இருந்தது தி.மு.க. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து, 'ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்' என்று போராடுகின்றனர். இதைவிடப் பெரிய கொடுமை எதாவது இருக்க முடியுமா? என் அப்பா இறந்துவிட்டார் என்று நான் அழும்போது, கொன்றவனும் அருகில் அமர்ந்து அழுவதைப் போலத்தான் பார்க்கிறேன். 'அ.தி.மு.க செய்யத் தவறிவிட்டது' என தி.மு.கவும் 'காங்கிரஸ் செய்த துரோகம்' என பா.ஜ.கவும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்கின்றன.
"டெல்லியில் நடக்கும் காட்சிகள் அனைத்தையும் நாடகமாகத்தான் பார்க்கிறேன். 'தீர்ப்பில் தடை' என்று வந்துவிட்டால், அவசரச் சட்டம் இயற்றுவதில் சிக்கல் ஏற்படும். எனவேதான், ஒரு வாரத்துக்கு என ஒப்புக்குத் தள்ளி வைத்துள்ளனர். அதன்பிறகு, 'ஜல்லிக்கட்டுக்குத் தடை' என்று உச்ச நீதிமன்றம் சொல்லும். இந்தத் தீர்ப்பை இந்த நாடு மதிக்கலாம். நான் ஒரு போதும் மதிக்கப் போவதில்லை. அதனால்தான் தடையை மீறி ஏறு தழுவுதலை நடத்தினேன். இனி வரும் காலங்களில் தடை என்பது வார்த்தை அளவில்தான் இருக்கும். தடையை மீறி புரட்சி வெடிக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. அதே சமயம் தொடர்ச்சியாக போராடும் மாணவப் பிள்ளைகள், தற்போது பின்பற்றும் அறவழியைத்தான் தொடர வேண்டும். அறவழிக்கே அரசால் பதில் சொல்ல முடியவில்லை. நிற்கும் இடத்தில் இருந்தபடியே, நீங்கள் எழுப்பும் குரலை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. 'அரசியல் வேண்டாம்' என்று மாணவர்கள் சொல்வதே மிகப் பெரிய அரசியல். 'ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கு' என்று நீங்கள் சொல்வதே ஆகச் சிறந்த அரசியல். அதைத் தொடர்ந்து செய்யுங்கள்" என்றார் நெகிழ்ச்சியோடு.  ஆ.விஜயானந்   விகடன்

கருத்துகள் இல்லை: