திங்கள், 16 ஜனவரி, 2017

தமிழகமெங்கும் பீட்டா, பாஜக , அதிமுகவை ஒரே நேரத்தில் உடைத்தெறிந்த ஜல்லிகட்டு காளைகள்!


விலங்குகளை காட்சிப் பொருளாக்கும் பட்டியலில் காளைகளைச் சேர்த்ததால் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நிலையில், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம்
தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களையும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் காவல் துறையினர் தடியடி நடத்தி கைது செய்துவருகின்றனர்.
திருவள்ளூர்
பொன்னேரி அருகே உள்ள எருமைவெட்டி பாளையத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம், வி.மருதுார் வடபத்திர காளியம்மன் கோவில் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது. போலீசாரின் தடையையும் மீறி நூற்றுக்கணக்கான காளைகளை இளைஞர்கள் அவிழ்த்துவிட்டு மஞ்சுவிரட்டு நடத்தினார்கள்.

காரைக்குடி
காரைக்குடி அருகே தென்கரையில் 300க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். காவல்துறையின் தடையை மீறி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
திருச்சி
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூர் ஊராட்சியில் காணும் பொங்கல் நாளான இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தடையை மீறி 20 மாடுகளுக்குமேல் அவிழ்த்துவிடப்பட்டன. இதற்காக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல, திருச்சி அருகே உள்ள பொன்மலைப்பட்டியில் சேவல் சண்டை நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூரில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆறுக்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது
நாகை
வேதாரண்யம் அருகே வாய்மேடு நடுக்காட்டில் காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது
சிவகங்கை
திருப்பத்தூர் அருகே தென்கரைபாணி கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது
வெளிநாடுகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டங்கள்:
சான்பிரான்சிஸ்கோ
சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு பொங்கல் நாளன்று சிலிக்கன்வேலியின் பிரிமாண்ட் நகரில் ஏற்பாடு செய்திருந்தது. தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக்கோரி, ஒருமித்த கருத்துகொண்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் குடும்பத்துடன் பங்கேற்று பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் குரல் எழுப்பினர்.
ஆஸ்திரேலியா
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், விக்டோரியா சபை கட்டடத்தின் முன்பாக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: