ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகதிகள் வருவதற்கு தடை .. ஈரான் ஈராக் லிபியா சோமாலியா சூடான் சிரியா ஏமன்...


அமெரிக்காவில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சிரியா, ஏமன், ஈராக் உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தடைவிதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அகதிகளுக்கு தடைவிதிக்கும் டிரம்பின் இந்த முடிவு உலகநாடுகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவு என்பது அகதிகளுக்கு பேரிடியாக உள்ளது என்றும் “தாங்கள் செய்யாத தவறுக்காக கடந்த ஆறாண்டு காலமாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு குழந்தைகள் இந்த உத்தரவால் வஞ்சிக்கப்படுவதை எண்ணி நான் வேதனை அடைகிறேன்” என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பதவிக்கு வந்த பிறகு தனது முதல் கையெழுத்தை, ஒபாமா காப்பீடு திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டு அனைவரையும் அதிகர்ச்சிக்குள் ஆக்கினார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
குறிப்பாக, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் முயற்சிகளில் இறங்கி அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார். இந்நிலையில், சிரியா, ஏமன், ஈராக், லிபியா, சோமாலிய, சூடான், ஈரான் ஆக்கிய எழு இஸ்லாம் நாடுகளின் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. டிரம்பின் இந்த உத்தரவு தமக்கு பெரும் வேதனை அளிப்பதாக மலாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், "உலகம் முழுவதும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. குடிபெயர்ந்த மக்கள்தான் உங்கள் நாடு உருவாக பாடுபட்டார்கள். தங்களது கடின உழைப்பின் மூலம் தங்களுக்குக்கான புதிய வாழ்க்கையை அமைந்து கொண்டார்கள். அமெரிக்கா அகதிகளையும், புலம் பெயர்ந்தவர்களையும் அரவணைக்கும் நாடு என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்திலிருந்து பின் நோக்கி சென்று விட்டது" என்று கூறியுள்ளார்.
மலாலாவை போலவே டிரம்ப்பின் இந்த முடிவை பல்வேறு சமூக ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் பிரபலங்களும் எதிர்த்து வருகின்றனர். ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் இந்த உத்தரவை எதிர்த்து தனது பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தனது மூதாதையர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள் தான். அமெரிக்கா அகதிகளால் உருவான ஒரு நாடு. உலகில் வாழ மிகவும் தகுதியான இடமாக அமெரிக்காவை மாற்ற வேண்டும், மாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா அதிபர் தேர்தலின் பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்ப், தான் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பெரும் சுவர் எழுப்பப்பட்டு தீவிரவாதிகள் ஊடுருவலை முற்றிலுமாக தடை செய்யப்படும் என்றும் அறிவித்தார். மேலும், அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ட்ரம்பின் இந்த பேச்சு இனவாதத்தை தூண்டுவதாக உள்ளது என்று அனைவரும் விமர்சித்தனர். அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்டார் டிரம்ப். இந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெறுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் தேர்தலின் முடிவுகள் ட்ரம்பிற்கு சாதகமாக முடிந்தது. இவர் வெற்றிபெற்றதை ஏற்காத அமெரிக்கர்கள் இவருக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பின்னர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் தொடர்ந்து தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வென்றாக நிறைவேற்றிவருகிறார். அதில் ஒன்று தான் இந்த அகதிகளுக்கு தடை. டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான முதல் பணியை டிரம்ப் துவங்கியுள்ளார். அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பெயரில், ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவது 30 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் அகதிகள் மறு குடியேற்றம் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனினும், சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவில் கடந்த 1980ஆம் ஆண்டு அகதிகள் மறு குடியேற்றம் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு அமெரிக்காவில் குடிபெயர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1995 ஆண்டுவரை சராசரியாக ஆண்டுக்கு 1. 2 லட்சம் அகதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. சென்ற நிதியாண்டு ( செப்டம்பர் வரை) முடிவில் மொத்தம் 84,995 அகதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த 39000 இஸ்லாமியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த எண்ணிக்கையை நடப்பு நிதியாண்டில் 50 ஆயிரமாக குறைக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அகதிகளின் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி அமெரிக்காவை சீர்குலைப்பதாக தெரிவித்து அமெரிக்காவில் இருந்து அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சி என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒடுக்குவது, அமெரிக்காவில் மற்ற நாட்டினருக்கு உரிய வாய்ப்பு வழங்காமல் தடுப்பது போன்ற டிரம்பின் நடவடிக்கை என்பது உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. உலகமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நட்புபேனி சமத்துவம் பாராட்டி வாழ்வதே சமூக அரணாகும் இதுவே நமது மானுடவியல் தத்துவமாகவும். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு நன்மை செய்வதாக சொல்லி மற்ற அனைவருக்கும் தீங்குவிளைப்பதன் மூலம் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  மினன்ம்பலம்

கருத்துகள் இல்லை: