செவ்வாய், 31 ஜனவரி, 2017

தேசியக்கொடியைப் பிடுங்கி அடித்துத் துவைத்தார்கள்’

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை அறவழியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்... போலீஸார் நடத்திய வன்முறையால் முடிவுக்கு வந்தது. சென்னையில் போலீஸார் நடத்திய தாக்குதலில் நடந்தது என்ன? தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சொல்கிறார்கள். >திருநங்கை கிரேஸ் பானு (மெரினா போராட்டக்காரர்):‘‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா சட்டம் வந்ததை எல்லாருக்கும் தெரியப்படுத்தி இருக்கணும். எந்த விளக்கமும் கொடுக்காம எங்களை அவசரப்படுத்தினாங்க. அது மட்டுமல்லாம, ‘எங்க லாயர் வந்துடுவாங்க. அப்புறமா நாங்க கலைஞ்சுப் போறோம். ரெண்டு மணி நேரம் டைம் கொடுங்க’ன்னு போலீஸார்கிட்ட கேட்டோம். ஆனா, அதுக்குள்ள அங்கிருந்த எல்லா போலீஸும் கூட்டத்துக்குள்ள நுழைஞ்சுக் கலைக்க ஆரம்பிச்சாங்க.
‘ஏன் இப்படிப் பண்றீங்க. நாங்கதான் ரெண்டு மணி நேரத்துல கிளம்பிடுறோம்னு சொல்றோமே... அதுக்குள்ள ஏன் எல்லாரையும் கலைஞ்சு போகச் சொல்றீங்க’ன்னு கேட்டோம். ஆனா, அதை காது கொடுத்துக் கேட்காத போலீஸ் காரங்க எங்களைத் துரத்தித் துரத்தி அடிக்க ஆரம்பிச்சாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து கட்டிப்பிடிச்சபடி தேசியகீதத்தைப் பாடினோம். தேசியக்கொடியையும் கையில வெச்சிருந்தோம். ஆனா, போலீஸ் காரங்க தேசியக்கொடியைப் பிடுங்கி எறிந்துவிட்டு... மீண்டும் எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. பசங்கள அடிச்சித் தரதரன்னு இழுத்துட்டுப் போனாங்க. நாங்க எல்லாரும் கடலுக்கு ஓடினோம். அப்போ ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து தரையில போட்டு அடிச்சாங்க. நான், ‘அவங்களை அடிக்காதீங்க’ன்னு கத்தினேன். அதுக்கு என் முடியைப் பிடிச்சி இழுத்து... போலீஸ்காரங்க சுத்தி நின்னுக்கிட்டு என்னை அடிச்சாங்க. வலி தாங்க முடியாமக் கத்தினேன். கொஞ்ச நேரத்துல மயங்கிட்டேன்; அதுக்குப்பிறகு எனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாது. பசங்க தண்ணி தெளிச்சி எழுப்பியபோது ஆம்புலன்ஸுக்குப் பக்கத்துல கிடந்தேன். அறவழியில போராடின எங்களை... போலீஸ்காரங்கத் திட்டமிட்டு, கலவரக்காரங்கன்னு சொல்லி அடிக்கிறாங்க; உதவிசெஞ்ச மீனவர் பகுதிகளிலும் தடியடி நடத்துறாங்க. இதுக்கெல்லாம் அரசாங்கம் கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கணும்; மேலும், போராட்டத்தில் கைதுசெஞ்ச அத்தனை பேரையும் எந்த வழக்கும் போடாம உடனடியா விடுதலை செய்யணும்’’ என்றார்.
செல்வகுமார் (மீனாம்பாள் புரம்): ‘‘இளைஞர்கள் கலவரம் பண்றாங்கன்னு சொல்லி... எல்லா கலவரத்தையும் போலீஸ்காரங்கதான் செஞ்சாங்க. கலவரத்தப்போ நான் எங்க வீட்டு மாடியில நின்னுக்கிட்டு இருந்தேன். இதைப் பார்த்த போலீஸ்காரங்க உடனே, ‘மேல ஒருத்தன் வீடியோ எடுக்குறான். அவனைத் தூக்குங்க’ன்னு சொல்லி மேல வந்தாங்க. ஆனா, நான் வீடியோவே எடுக்கலை. மேலே வந்தவங்க, எதுவுமே கேட்காம அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் மாடியிலேர்ந்து என்னைக் கீழே இழுத்துட்டுப் போனாங்க. அப்ப, அங்கிருந்தவங்க என்னை விடச்சொல்லி கத்துனாங்க. ‘யார் வந்தாலும் உங்களுக்கும் இந்த நிலைமைதான்’னு சொல்லிட்டு என்னைத் தூக்கிட்டுப் போனாங்க. அடுத்தநாள், காலையில எங்கேயோ ரோட்டுல கிடந்த என்னை, எங்க ஆளுங்க ஹாஸ்பிட்டல்ல கொண்டுபோய்ச் சேர்த்திருக்காங்க. போலீஸ்காரங்க அடிச்சதுல என்னுடைய தலை உடைஞ்சிருப்பதாகவும், என் கை எலும்பும் துண்டா உடைஞ்சிபோய் இருப்பதாகவும் டாக்டர் சொல்லியிருக்காரு’’ என்றபடியே தன்னுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்டினார்.

சசிகுமார் (ஐஸ் ஹவுஸ்): ‘‘சம்பவத்தப்போ... நான் கடையிலேர்ந்து வீட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். போலீஸ்காரங்க, என்னைத் தடுத்து, ‘உனக்கு எந்த ஏரியா, வீடு எங்கே’ன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்றதுக்குள்ளேயே அங்கிருந்த மூணு போலீஸ்காரங்க என்னைச் சுத்திவளைச்சு அடிக்க ஆரம்பிச்சாங்க. வலி தாங்கமுடியாம நான் குப்புறப்படுத்திட்டேன். அவங்க விடாம முதுகுலேயும் அடிக்க ஆரம்பிச்சாங்க. நான், ‘விடுங்க’ன்னு கத்தினேன். ‘உதவியாடா பண்றீங்க உதவி... இப்போ அனுபவி’ன்னு சொல்லித் திருப்பித் திருப்பி அடிச்சாங்க. அவங்க அடிச்சதுல என் காலு ரெண்டும் போச்சு’’ என்று கண்ணீர் வடித்தார்.
ரவி (திருவல்லிக்கேணியில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருப்பவர்): இவரை கடுமையாகப் போலீஸார் தாக்கியுள்ளனர். மண்டை உடைந்து அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘என் மனைவிக்கு சாப்பாடு வாங்கி வர வந்தேன். போலீஸாரும் பொதுமக்களும் கற்களைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அதைக் கண்டு பயந்து போய் ஓரமாக ஒதுங்கி நின்றேன். எதிரே வந்த போலீஸார் லத்தியால் என்னை, அவர் களைச்சுப்போற வரைக்கும் அடிச்சார். நான் போராட்டக்காரனா? பார்த்துக் கொள்வதற்குக்கூட வழியில்லாம அனாதை மாதிரி படுத்திருக்கேன். வேலைக்குப் போனாதானே என் பொழைப்பு ஓடும்” என்று கதறினார்.
கபிலரசன்: (திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்) போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் பேசியபோது, ‘‘நான் போராட்டத்தில் தமிழன் என்ற உணர்வால் பங்கேற்றிருந்தேன். ஏன் வீட்டுக்குள் புகுந்து அடித்தார்கள் எனத் தெரியவில்லை.  காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் எடுத்துள்ளோம். காது கேட்காமல் போனால் என் வாழ்கை என்ன ஆவது’’ என்று கலங்குகிறார்.

- கே.புவனேஸ்வரி, ஜெ.அன்பரசன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்  vikatan

கருத்துகள் இல்லை: