வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சென்னையில் 2,000 டன் மீன்கள் தேக்கம்.... கடலில், கசடு எண்ணெய்... கப்பல் கம்பனிகளிடம் லஞ்சம் .. ?

கொடுமையா இருக்கு... 😢😢 இதே வெளிநாட்டுல இப்படி நடந்து இருந்தா கப்பல் நிறுவனம் மேல அபராதம் போட்டு அந்த கப்பல் கேப்டனை உள்ள புடிச்சி போட்டு இருப்பாங்க
கடலில், கசடு எண்ணெய் கலந்துள்ள நிலை யில், மீன் சாப்பிடுவது ஆபத்து' என, பரவிய தகவலால், சென்னை காசிமேடு மீன்பிடி துறை முகத்தில், 2,000 டன், மீன்கள் விற்காமல் தேங்கி உள்ளன. சென்னை, எண்ணுார் துறைமுகம் அருகே, ஜன., 28ல், இரு சரக்கு கப்பல்கள் மோதி கொண்டன. சேதமடைந்த கப்பலில் இருந்த கசடு எண்ணெய், கடலில் பரவியது.இதனால், எண்ணுார் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில், கசடு எண்ணெய் படர்ந்துள்ளது. அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. 'கசடு எண்ணெய் கலப்பால், மீன்களில் விஷத் தன்மை பரவி இருக்கும்; அதை சாப்பிடுவது ஆபத்தானது' என, சில சுற்றுச் சூழல் ஆர்வலர் கள், கருத்து தெரிவித்தனர். இது, மீன் பிரியர் களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சென்னை, காசிமேடு மீன்பிடி துறை முகத்தில், ஐந்து நாட்களில், 2,000 டன் மீன்கள், விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.


இது குறித்து, சென்னை விசைப்படகு உரிமை யாளர்கள் சங்க தலைவர், ரகுபதி கூறியதாவது:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 1,200 விசைப்படகுகள் உள்ளன. தினமும், 30 முதல், 50 படகுகள் கரை திரும்பும். வழக்கமான நாட்களில், 400 டன், புதன், ஞாயிறுகளில், 600 டன் வரை மீன் வரத்து இருக்கும்.

தற்போது, கசடு எண்ணெய் கலப்பு பீதியில், மக்கள் மீன் வாங்க மறுக்கின்றனர். ஏற்றுமதி செய்யவும், முகவர்கள் முன் வரவில்லை. இதனால், ஐந்து நாட்களில், 2,000 டன்னுக்கு மேல், மீன்கள் தேங்கி உள்ளன.

கடலோர பகுதிகளில் தான், கசடு எண்ணெய் படர்ந்துள்ளது. இங்கிருந்து செல்லும் விசை படகுகள், ஆந்திர மாநிலம், கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளை ஒட்டிய, கடல் பகுதிகளிலும், ஆழ்கடல் பகுதிகளிலும் மீன் பிடிக்கின்றன. அங்கு கசடு எண்ணெய் கலப்பு இல்லை. இதனால், மீன்களில் ரசாயன கலப்பு இல்லை. வதந்திகளை நம்பாமல், மக்கள் தயக்கமின்றி மீன் சாப்பிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மக்களின் அச்சம் காரணமாக, எப்போதும் பரபரப்புடன் காணப்படும், காசிமேடு மீன்பிடி
துறைமுகம் வெறிச்சோடி உள்ளது. சென்னையில் உள்ள, மீன் மார்க்கெட்களும் களை இழந்துள்ளன.

இது குறித்து, ஜாம்பஜார் சில்லரை மீன் வியாபாரி மூர்த்தி கூறுகையில், ''கடலில் கலந்துள்ள கசடு எண்ணெய், தண்ணீரில் கலக்காது; அவை, தனியாக மிதக்கும். நாங்கள், ஆழ்கடல் மற்றும் ராமேஸ்வரம், துாத்துக்குடி மற்றும் ஆந்திரா கடல் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை விற்கிறோம். எனவே, மக்கள் அச்சமின்றி வாங்கிசெல்லலாம்,'' என்றார்.

6வது நாளாக போராட்டம்

எண்ணுார், பாரதியார் நகர் கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கும், கசடு எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில், பல்வேறு துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கெட்டி தன்மையுடன் இருப்பதால், உறிஞ்சும் முறையில் வெளியேற்ற இயலவில்லை.எனவே, ஊழியர்கள், கைகள் மூலமாகவே, பக்கெட்டுகளில் அள்ளி, தொட்டி களில் நிரப்பி வருகின்றனர்.

மாலை நேரத்தில் பணிகள் நிறுத்தப்பட்டு, மறுநாள் காலையில் துவங்கும் போது, கசடு எண்ணெய் படலம் மீண்டும் அதிகரித்து இருக்கிறது. இதனால், அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மலைத்து போயுள்ளனர்.நேற்று, ஆறாவது நாளாக, 500-க்கும் மேற்பட்டோர், கசடு எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கசடு எண்ணெயை, பக்கெட்டுகளில் வாரி, பலர் கைகளில் மாறி தொட்டிக்கு வருவதால், பாறை களில் எண்ணெய் வழிந்து, வழுக்கும் நிலையில் இருக்கிறது. எந்நேரமும் விழுந்து விடுவோம் என்ற அச்சத்திலேயே, ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கப்பல்களை முடக்க ஐகோர்ட்டில் வழக்கு

தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்துள்ள மனு:
எண்ணுார் துறைமுகம் அருகில், இரண்டு கப்பல்கள் மோதி கொண்டதில், ஒரு கப்பலில் இருந்த கசடு எண்ணெய் கசிந்து, கடலில் கலந்தது. இதனால், மீன்களும், ஆமைகளும் செத்து மிதக்கின்றன. மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியவில்லை.

கடலில் கலந்துள்ள எண்ணெயை அகற்ற, தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்த விபத்துக்கு காரணமான கப்பல் நிர்வாகத்திடம் இருந்து, அபராதம் வசூலிக்க வேண்டும்.விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும், சென்னை துறைமுகத் தில் இருந்து வெளியே செல்லாமல், முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.< மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கசடு எண்ணெய் கலந்த, அனைத்து பகுதிகளிலும், கடல் நீர் மாதிரிகள் எடுத்து, ஆய்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட ஆய்வில், எர்ணாவூர் கடல் பகுதியில், 80 சதவீத எண்ணெய் கலப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. முழுமையான ஆய்வு முடிவுகள், ஓரிரு நாளில் கிடைக்கும்' என்றனர்.

பழவேற்காடு மக்கள் அச்சம்

எண்ணுார் முதல், கோவளம் வரை கசடு எண்ணெய் படலம் பரவியது. நேற்று, பழவேற் காடு ஒட்டிய, கோரை குப்பம் பகுதி கடலில், எண்ணெய் கழிவு பரவியதாக கூறப்பட்டது. இதனால், தங்கள் பகுதிக்கும் பரவுமோ என, பழவேற்காடு மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோரை குப்பம் பகுதியில், ஆய்வு செய்தோம்; அங்கு, எந்த பாதிப்பும் இல்லை. பழவேற்காடு பகுதிக்கு பாதிப்பு வராது; மீனவர் கள் பீதி அடைய வேண்டாம்' என்றனர்.

அறிக்கை கேட்கிறது அரசு

பொன்னேரி,மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர், பெலிக்ஸ் கூறியதாவது:

கடலில், கசடு எண்ணெய் கலந்துள்ள நிலை யில், மீன்கள் சாப்பிட தகுந்ததா என, ஆய்வு செய்து அறிக்கை தர, அரசு உத்தர விட்டுள்ளது. கசடு எண்ணெய் கலந்த பகுதிகளில், கடல் நீர் மாதிரிகள் எடுத்து, பல கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். மீன்கள் சாப்பிட தரம் வாய்ந்ததா எனவும், ஆய்வு நடக்கிறது. இந்த அறிக்கை, ஐந்து நாட்களில், அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஆழ்கடலில் பிடிக்கும் மீன்களை சாப்பிடுவ தால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், எதையும் ஆய்வுக்கு பிறகே உறுதி அளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: