புதன், 17 ஆகஸ்ட், 2016

திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.. ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தம்..

தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக உறுப்பினர் கலைச்செல்வன் அவையில் பேசும் போது ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் பற்றி விமர்சித்தார். நமக்கு நாமே பயணம் பற்றி தேவையின்றி பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். அதிமுக உறுப்பினர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் பேரவைத் தலைவர் தனபால் அதிமுக உறுப்பினர் கலைச்செல்வன் பேச்சை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதன் பின்னர் திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டமன்றத்திலிருந்து எதிர்கட்சியான திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற அவைக்காவலர்கள் முயற்சித்தனர். எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலினையும் அவைக் காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற முயற்சித்தனர்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இருதரப்புக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்று திமுக உறுப்பினர்கள் 1 வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 நடப்பு சட்டப்பேரவை தொடரில் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை. அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் உரை உட்பட சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் திமுக உறுப்பினர்கள் முறையாக பங்கேற்றதாக குறிப்பிட்டார். திமுக உறுப்பினர்களை எப்படியாவது அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டே அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசுவதாக சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மேலும் வேண்டும் என்றே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக சபாநாயகர் அவதூறாக புகார் கூறுவதாக தெரிவித்தார். தாம் நடத்திய நமக்கு நாமே பிரச்சாரம் குறித்து அவமரியாதையாக அதிமுக உறுப்பினர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த சொல்லை நீக்க வலியுறுத்தியதால் திட்டமிட்டு அவையிலிருந்து வலுக்கட்டாயமாக தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சபாநாயகர் தனபால் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், வரும் 22-ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை பேரவையில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே இந்த விவாதத்தில் திமுகவினர் பங்கேற்பதை தடுக்கவே உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக புகார் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சித் தலைவருடன் விவாதித்து முடிவு செய்ய உள்ளதாக குறிப்பிட்டார்.  nakkeeran.in

கருத்துகள் இல்லை: