புதன், 2 நவம்பர், 2011

அண்ணா நூலகம் அகற்றப்படுகிறது மருத்துவ நிலையமாகிறதாம்


Anna Centenary Library
சென்னை: கடந்த திமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பார்த்துப் பார்த்துக் கட்டிய, சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உயர் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அங்குள்ள நூலகம் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும், டிபிஐவளாகம் ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்காவாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


அதி நவீன அண்ணா நூற்றாண்டு நூலகம்
இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். 172 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு ஆகஸ்ட்- 16, 2008 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில், எட்டுத்தளங்களோடு பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் அண்ணா பிறந்த தினத்தன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.எட்டுத் தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் அனைத்துத் தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ கட்டப்பட்டுள்ளது.

இந்த நூலகக்கட்டடத்தினை தற்போது குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த நூலகம் சென்னை கல்லூரிச்சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் டிபிஐ வளாகம் அறிவுசார் பூங்காவாக மாறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

2011-2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சென்னை டி.பி.ஐ. (Directorate of Public Instruction) வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான முடிவுகள் 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், இங்கு பேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் ஆகியவை இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமையப்பெறும்.

ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமையவிருக்கும் டி.பி.ஐ. வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்திற்கு மிக அருகில் உள்ளதால் நவீன மைய நூலகத்தினை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அண்ணா நூற்றாண்டு நூலகம் டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பின், தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக் கப்படும். குழந்தைகளுக்கான இதுபோன்ற அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இதுவரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் நலனுக்கென இது போன்ற உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: