சனி, 5 நவம்பர், 2011

இவுக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கிடுவாய்ங்க போலிருக்கே!

ஜெ. சந்தேகம்! “சுப்ரீம் கோர்ட்டில் நம்ம ஓ.பன்னீருக்கு ஆள் இருக்கா?”

Viruvirupuபுதுடில்லி, இந்தியா: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கை தவிர்ப்பதற்காகச் செய்த அடுத்த முயற்சிக்கும் விழுந்தது முட்டுக்கட்டை. வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் செய்திருந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. முதல்வர் மீண்டும் பெங்களூரு செல்ல வேண்டிய நிலை!
அதுவும் இம்முறை முன்பைவிட மோசமான நிலை. இரண்டொரு நாட்கள் வந்தால் போதும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், எத்தனை நாட்கள் அழைக்கிறார்களோ, அத்தனை நாட்கள் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று வந்து விழுந்திருக்கிறது  இடி.
முதல்வர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மனுவில், “ஒரு நாள் விசாரணை என்றார்கள். அதை இரண்டு நாட்களாக நீடித்தார்கள். இப்போது மீண்டும் 8-ம் தேதி வர சொல்கிறார்கள். இப்படியே நீடித்துக்கொண்டு இருந்தால் எம்மால் வரமுடியாது” என்ற ரிமார்க்குக்குதான் இந்த இடி விழுந்துள்ளது.
“விசாரணைக்கு காலவரம்பு எதுவும் கூறமுடியாது. எப்போது அழைக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆஜராகி, விரைவில் வழக்கை முடிக்க வேண்டும்”  என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது சுப்ரீம் கோர்ட்.
தேவையில்லாமல் தாமே தடியை எடுத்தும் கொடுத்து,  அடியும் வாங்கியிருக்கிறார் முதல்வர்.

முதல்வரின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதீபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோரின் முன்னிலையில் ஹியரிங்குக்கு வந்தபோதே, இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. “இவர் (ஜெயலலிதா) முதல்வர் என்ற காரணத்தால் கோர்ட்டில் ஆஜராகாமல் எழுத்து மூலம் பதில் அளிக்கிறேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. அதற்கு அனுமதி கொடுத்து, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியாது” என்று முதல்வரின் ரிமோட்-ஆன்சரிங் பிளானையும் தகர்த்து விட்டது சுப்ரீம் கோர்ட்.
தீர்ப்புதான் இப்படி முதல்வருக்கு எதிராக உள்ளதென்றால், தீர்ப்பின் முடிவில் இலவச ஆலோசனையாக, “இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. அதனால்,  இதை விரைவில் விசாரித்து முடித்து, தீர்ப்பு கூற வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
என்னங்க இது, சங்கடம் புரியாம சொல்லியிருக்காய்ங்க? தீர்ப்பு வந்தால், ஹேப்பி-என்டிங் ஃபிக்ஷனாக இருக்காதே! இவுக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கிடுவாய்ங்க போலிருக்கே!

கருத்துகள் இல்லை: