செவ்வாய், 1 நவம்பர், 2011

ஜெயலலிதாவுக்கு சோ சொல்லிக் கொடுத்த ஐடியா போலிருக்கே இது!


Viruvirupu, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை செல்ல இருந்த பாதையில், வெடிகுண்டு இருந்தது பற்றி, போலீசுக்கு தகவல் கொடுத்த இருவருக்கு, முதல்வர் ஜெயலலிதா 50,000 பரிசு பிளஸ் பாராட்டுகளை வழங்கியுள்ளார். (இருவரும் அ.தி.மு.க.-வை சேர்ந்த ஆட்கள் என்கிறார்கள்) இவர்கள் இருவரும் நேரடியாக சென்னைக்கு (போயஸ் கார்டனுக்கே) வரவழைக்கப்பட்டு, முதல்வரை நேரில் சந்திக்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட தகவல் சும்மா பத்திரிகைச் செய்தியாக வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. தலைமைக் கழகம், அதை ஒரு அறிக்கையாகவே வெளியிட்டிருக்கின்றது.
மேலே குறிப்பிட்டது ஒரு சாதாரண செய்தி. டிப்பளமட்டிக்-பாலிட்டிக்ஸ் தெரிந்தவர்களுக்கு, அதன் பின்னணியில் ஒரு அரசியல் பிளானிங் தெரியும்.
உங்களுக்குத் தெரிந்திருந்தால் சரி. தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசின்மீது கோபம் கொள்வதற்கு நிறையக் காரணங்கள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி போதியளவு வழங்கப்படவில்லை என்பது போன்ற நிர்வாக காரணங்கள் ஒருபுறம். கனிமொழி ஜாமீன் மனுவுக்கு மத்திய அரசு (அல்லது சி.பி.ஐ. என்றும் எடுத்துக் கொள்ளலாம்) எதிர்ப்பு காட்டவில்லை என்பது போன்ற அரசியல் காரணங்கள் மறுபுறம்.
மூன்றாவதாக, தன்மீது பெங்களூருவில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கில், மத்திய அரசு நினைத்தால் ‘ஏதாச்சும்’ செய்யலாம். ஆனால் செய்யவில்லை என்ற கோபமும் உண்டு.
தமிழகத்தில் அ.தி.மு.க. அட்டகாசமான வெற்றி பெற்றும்கூட, டில்லியில் இருந்து நட்பு-சிக்னல் ஏதும் வரவில்லை. சிக்னல் வரவிடாமல் தடுத்ததில் கருணாநிதியின் பங்கும் உள்ளது என்பதும் முதல்வரின் கன்க்ளூஷன்.
“கலைஞர் என்ன மாயம் செய்தோ, காங்கிரஸ் – தி.மு.க. நெருக்கத்தை இன்னமும் உயிருடன் வைத்திருக்கிறார்” என்பதில் முதல்வருக்கு காங்கிரஸின் டில்லி தலைமை மீது அதிருப்தி என்பது டிப்ளமட்டிக்-பாலிட்டிக்ஸ் தெரிந்த அனைவருக்கும் புரிந்த விஷயம்.
அதேநேரத்தில், ஒரு தரப்புடன் அதிருப்தி ஏற்பட்டால், அவர்களுக்கு எதிர் தரப்புடன் நெருக்கமாவது முதல்வரின் அரசியல் ஸ்டைல். மத்தியில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிர்த் தரப்பு என்று பார்த்தால் முன்னே நிற்பது, பா.ஜ.க.! வெறும் மாநில அளவில் சுற்றிக்கொண்டு இருக்காமல், அகில இந்திய அரசியலில் காலடி வைக்க விரும்பினால், முதல்வருக்கு உள்ள ஒரே சாய்ஸ்கூட பா.ஜ.க.-தான்!
மற்றொரு விஷயம், முதல்வரின் ‘பிகைன்ட்-த-சீன்’ அரசியல் ஆலோசகர் என்று பரவலாகக் கூறப்படும் பத்திரிகையாளர் சோவின் சாய்ஸ்கூட (காங்கிரஸோடு ஒப்பிடும்போது) பா.ஜ.க.தான்!
ஆனால், பா.ஜ.க.வுடன் நேரடி அரசியல் அலையன்ஸ் எதிலும் தற்போதைக்கு சிக்கிக் கொள்ள ஜெயலலிதா விரும்ப மாட்டார். அப்படிச் செய்வதில் என்ன பாதகம் என்றால், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பார்கேனிங்-பவரை அது குறைத்துவிடும். ஆனால், இப்போதிலிருந்தே நல்லெண்ண சிக்னல்களை பா.ஜ.க.வை நோக்கி அனுப்பினால், பின்னாட்களில் உபயோகமாக இருக்கும்.
மேலே கூறப்பட்டவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், அத்வானி விவகாரத்தில் போலீசுக்கு தகவல் கொடுத்த இருவருக்கு, முதல்வர் ஜெயலலிதா 50,000 பரிசு பிளஸ் பாராட்டுகளை வழங்கியதன் பின்னணியில் ஒரு ‘சிக்னல்’ இருப்பது தெளிவாகப் புரியும்!
முதல்வர் இந்த ரூட்டில் போக, தமிழகத்தில் ஸ்லீப்பிங்-மோட் நிலையில் இருக்கும் பா.ஜ.க.வும், சந்தடி சாக்கில் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறது.
தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த இருவரின் செயற்பாட்டையும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து பாராட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். நாளை மறுதினம் (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு இணைப் பொதுச் செயலர் சதீஷ், இவ்விருவரையும் பாராட்டிப் பேசவுள்ளதாகவும், இந்த இருவருக்கும், தலா ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. அடித்த சிக்ஸர் அட்டகாசமானதுதான். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இருவரை பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பாராட்டி, அவர்களது சொந்தக் கட்சி கொடுத்ததைவிட இருமடங்கு நிதி வழங்குவது… அடாடா!
அட, காவிக் கட்சியிலும் விபரமானவர்கள்  இருக்கிறார்களே!

கருத்துகள் இல்லை: