வியாழன், 3 நவம்பர், 2011

இந்தம்மா கண்டிப்பாக “உள்ளே” இருக்க வேண்டியவர்.


என்னதான் வேணுமாம் இந்த ஆத்தாவுக்கு..? வராது வந்த மாமணியாய் இந்தம்மாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்ததே பெரிய விஷயம். இதை வைத்து மக்கள் மனதில் நல்ல பெயர் எடுத்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் கெடுதல் வராமல் பார்த்துக் கொள்வார் என்றால் அப்படியே உல்டா அடிக்கிறார்..!
180 கோடி செலவில் கட்டியிருக்கும் ஒரு கட்டிடம்.. அது முழுக்க, முழுக்க நூலகத்திற்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. அதனை எதற்காக மருத்துவமனையாக மாற்ற வேண்டும்..? உண்மையிலேயே மருத்துவமனை அவசியமெனில் தனியிடத்தில் கட்டிக் கொள்ளலாமா..? இத்தனை முன்னேற்பாட்டுடனான வசதி, வாய்ப்புகளுடன் நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு செய்திருக்கும் ஏற்பாட்டை சீர்குலைத்து கலைத்துப் போட இவருக்கு எப்படி யோசனை வருகிறது..? ஒருவேளை ஆத்தா லூஸாயிருச்சோ..?
ஒரு மருத்துவனையின் உள் கட்டமைப்பு எப்படியிருக்க வேண்டும் என்று கூட தெரியாதவரா இந்தம்மா..! இந்தக் கட்டிடத்தின் அமைப்பு எப்படிப்பட்டது.. இது மருத்துமனைக்கு ஒத்து வருமா..? குறைந்த செலவில் அமைக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா..? லட்சங்களில் இருக்கும் புத்தகங்களை வேறிடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கவே பல நாட்களாகும்.. அதுவரையில் நூலகத்தைப் பயன்படுத்தும் உரிமையை மக்களிடமிருந்தும் பிரித்தெடுக்கிறார். கொண்டு போகும் நூல்களின் கதி என்ன என்பதை இப்போதே நம்மால் உணர முடிகிறதே..! என்ன செய்வது..? படித்தால் மட்டும் போதாது.. பண்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என்பது இந்தம்மாவுக்குத் தெரியவில்லையே..!
கருணாநிதி கட்டினார் என்று பார்த்து, பார்த்து அத்தனையையும் சீர்குலைக்கத் துவங்கும் இந்தக் கேலிக்கூத்தான மனநிலை கொண்டவர்தான் நமது முதலமைச்சர் என்பதை நினைத்தாலே எனக்குப் புல்லரிக்கிறது. இப்படிப்பட்ட முதலமைச்சரை பெறுவதற்கு நாம் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்..!
ஊழல், அராஜகம் என்று சொல்லித்தான் சென்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் மக்கள். இப்போது இதே வழியில் ஆத்தாவும் அடிபோடுகிறார். கருணாநிதி மீதான அவரது கண்மூடித்தனமான வெறுப்புக்கு பாழாவது நமது மக்கள் பணம்தானே..? புதிய தலைமைச் செயலகத்தை இதேபோல பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, அதனை மருத்துவக் கல்லூரியாக்கப் போகிறேன் என்றார். இப்போது இந்தப் புகழ் பெற்ற நூலகத்தை இடம் மாற்றி இதையும் மருத்துவமனையாக்கப் போகிறேன் என்கிறார். இவ்வளவு ரோஷம் பார்ப்பவர்.. ஏன் கருணாநிதி கட்டிய பாலங்களில் பவனி வருகிறாராம்..? ஏன் தமிழ்நாடு முழுவதும் உள்ள கே.கே.நகர்களை முடிந்தால் நீக்கச் சொல்லுங்களேன்..! முடியுமா இவரால்..?
ஏதோ இவருடைய அப்பன், பாட்டன் வீட்டுச் சொத்து என்பதை போலவும், இவர் நினைத்ததையெல்லாம் செய்வதற்காகத்தான் இவரை மக்கள் முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது போலவுமான இவரது நம்பிக்கையை அடுத்த்த் தேர்தலில்தான் முறியடிக்க முடியும். அதுவரையிலான இவரது கோமாளித்தனங்களை எப்படி தாங்கிக் கொள்வது..? முகமது பின் துக்ளக்கின் வாரிசாக முதல் நபராக வரிசையில் நிற்கும் மாயாவதியுடன் போட்டியிட்டே தீருவது என்று கொள்கையில் இருக்கிறார்போலும்..!
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட பல குடியிருப்புகள் இன்றைக்கோ, நாளைக்கோ என்று இடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் அதனைக் காலி செய்ய விரும்பாமல் அதில்தான் ஓட்டை, ஒடிசலுடன் குடியிருந்து வருகிறார்கள். இதனைச் சரிப்படுத்த கிஞ்சித்தும் முயலவில்லை. சென்னையில் இருக்கும் குழந்தைகளுக்கான தனி சிறப்பு மருத்துவனை போல் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், ச்ட்டமன்றத் தொகுதிகளிலும் மருத்துவமனைகளைத் துவக்கலாம்.. இதனையெல்லாம் செய்ய மனமில்லை..! அதையெல்லாம் விட்டுவிட்டு, கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனைல வை என்று சொல்வதைப் போல ஜெயலலிதாவின் இந்த அராஜக அரசாணை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
நூலகங்களுக்கு அதிகம் பேர் போகவில்லை. வரவில்லை என்பதெல்லாம் ஒரு பேச்சே இல்லை..! சென்னையில் இருக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும் வருடத்திற்கொரு முறை இந்த நூலகத்திற்கு அழைத்து வந்து காண்பித்து அவர்களிடத்தில் நூல்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்குப் பிடித்தமானவகையில் நிகழ்ச்சிகளை நடத்தி நூலக வாசகராக்கும் பணியினை பள்ளிக் கல்வித் துறை செய்யலாமே..?
ஒரு மாணவன் வந்து பார்த்துவிட்டு அதனை வீட்டில் இருப்போரிடம் சொல்லி அது 4 பேரிடம் பரவி, கூடுதலாக வாசகர்கள் வரத் துவங்குவார்களே.. இவ்வளவு விசாலமான இடமும், நூலகத்திற்கான வசதியையும் இனிமேல் எத்தனை கோடி செலவழித்து கட்டித் தருமாம் இந்த அம்மையார்..? அது யார் வீட்டுக் காசு..? இருக்கிற கட்டிடத்தை ஒழித்துவிட்டு, அரசு கஜானாவைச் சுரண்டியெடுக்கும் இந்தப் பிச்சைக்கார புத்தி இந்த அரசியல்வியாதிகளுக்கு அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது..! 
அகம்பாவம்.. எல்லாவற்றுக்கும் காரணம் இதுதான்.. அதிலும் ஜெயலலிதாவின் அகம்பாவம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே வேறு யாருக்கும் இருக்காது..! நீ என்னதான் கரடியா கத்தினாலும் நான் பாட்டுக்கு கண்டுக்காமல் எருமை மாடு மீது மழை பேய்ஞ்சது போல போகத்தான் செய்வேன் என்பதுதான் இந்தம்மாவின் ஒற்றை வரி அஜெண்டா..! தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.. அதற்குள் அப்பாவிகளும், நாடும் சிதைந்துவிடுமே..? முருகா..! கொஞ்சம் சீக்கிரமாகவே தண்டித்துவிடக் கூடாதா..? 
இந்தம்மா கண்டிப்பாக “உள்ளே” இருக்க வேண்டியவர். இந்திய அரசியமைப்பின் கேலிக் கூத்தான சட்டங்களினால் முதலமைச்சராகவே பவனி வந்து கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை..!
ஐயா.. பெங்களூரு ஊழல் சிறப்பு கோர்ட் நீதிபதி அவர்களே.. உங்களைக் கை எடுத்துக் கும்பிடுறேன். காலைப் பிடிச்சுக் கெஞ்சுறேன்.. சீக்கிரமா, அட்லீஸ்ட் 10 வருஷமாவது இந்த ஆத்தாவை உள்ளாற வைச்சிருங்க துரை அவர்களே.. இந்தியாவே உங்களுக்கு நன்றிக் கடன் படும்..! 

/truetamilans.blogspot.com/

கருத்துகள் இல்லை: