சனி, 5 நவம்பர், 2011

நீதிபதி ஒருதலைப் பட்சம்: விசாரணை முடிந்துவிட்டதால் எனக்கு ஜாமீன் தர வேண்டும்! - கனிமொழி


டெல்லி: நான் ஒரு பெண்... எனக்கு சிறிய குழந்தை இருக்கிறான். எனவே எனக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும், என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் கனிமொழி எம்பி.
2 ஜி முறைகேடு வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. இதுவரை அவருக்கு நான்கு முறை ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக இரு தினங்களுக்கு முன் சிபிஐ நீதிமன்றம் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது.
பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும், கனிமொழி செய்த தவறு சாதாரணமானதல்ல என்றும் நீதிபதி ஓபி ஷைனி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் 5 வது முறையாக தனது ஜாமீன் மனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த முறை டெல்லி உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார் கனிமொழி.
தனது மனுவில், "இந்திய கிரிமினல் சட்டம் 437 படி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மற்றும் நோயாளிகள் அவர்களின் சமூக அந்தஸ்துக்கு அப்பாற்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்கிறது. ஆனால் எனக்கு அந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது.
என்னை நம்பி 9 வயதேயான மகன் இருக்கிறான். கடந்த 6 மாதங்களாக என்னைப் பிரிந்து என் மகன் தவிக்கிறான். எனது அரவணைப்பு தேவைப்படும் காலகட்டத்தில் என்னை சிறையில் வைத்திருப்பது அவனை பாதித்துள்ளது.
இதையெல்லாம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. மேலும் என்மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன், ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. சிபிஐயும் எனக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்காத நிலையில், நீதிபதி எனக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது ஒருதலைப்பட்சமானது. சிபிஐயின் விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், என்னை வெளியில் விட மறுப்பது ஏன்?," என்று கூறியுள்ளார்.
கனிமொழியுடன் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார், குசேகான் பழங்கள் மற்றும் காய்கறி நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பால்வா மற்றும் ராஜீவ் பி அகர்வால் ஆகியோரும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகின்றன.

கருத்துகள் இல்லை: