திங்கள், 31 அக்டோபர், 2011

கூட்டமைப்பினர் எஞ்சியுள்ள தமிழர்களையும் பாதாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியும்விடுவார்கள் .

தமிழர் தேசிய கூட்டமைப்பில் இணைந்தால் பாவங்கள் கழுவப்படுமா?

தமிழர் தேசிய கூட்டமைப்பில் (ரி.என்.ஏ)இணைந்துவிட்டால் பாவங்கள்; மன்னிக்கப்பட்டுவிடும் என்பதை தற்போது அறியக்கூடியதாக இருக்கின்றது. மனித உரிமைமீறலில் ஈடுபட்டவர்கள் தமிழர் தேசிய கூட்டமைப்பில் இணைந்தால் மட்டுமே மன்னிக்கப்படுவார்கள் உலகம் எங்கும்  தங்குதடையின்றி உல்லாசமாக சுற்றிவரலாம்.       ஆரம்பகாலங்களில் தமிழரசுக்கட்சியும் தமிழர்விடுதலைக்கூட்டணியும் தமது அரசியல்எதிரிகளை தோற்கடிப்பதற்காக அவர்களுக்கு துரோகி என்று பட்டம் சூட்டி அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்று மேடையில் முழங்கி இளைஞர்களை உசுப்பேத்தி அதன்மூலம் தமது பகடைக்காய்களாக அவர்களைப் பாவித்து  சிவகுமாரன்களை உருவாக்கி ஆயுதக்கலாச்சாரத்திற்கு அடிகோலினர்.  அதன் ஆரம்பம்தான்  யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை சிவகுமாரன் படுகொலைசெய்ய திட்டமிட்டான் அந்த முயற்சி வெற்றிஅடையாதலால் பின்னர் பிரபாகரனால் துரையப்பா கொலைசெய்யப்பட்டார். யாழ் மேயர் துரையப்பாவை படுகொலை செய்துவிட்டு வந்த பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்து தேனீர் ஊற்றிக்கொடுத்தவர்கள்தான்(யோகேஸ்வரன், அமிர்தலிங்கம்) இந்த அகிம்சாவாதிகள். பலம்மிக்க அரசியல் எதிரியான துரையப்பா ஊசுப்பேத்திய இளைஞர்களால் அழிக்கப்பட்டார்.  தமிழரசுக்கட்சியும் தமிழர்விடுதலைக்கூட்டணியும் இனவாதத்தீயை ஏற்படுத்தி அதில்தாம் குளிர்காய்ந்தார்கள்  அன்று இவர்களின் இனவாதப்போக்கை இடதுசாரிகள் எச்சரித்தார்கள் இவர்கள் தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லப்போகின்றார்கள் என்ற கூறியிருந்தார்கள். ஆனால்  படித்தவர்கள் அறிவாளிகள் சொல்கின்றார்கள் என இளைஞர்கள் தமிழரசுக்கட்சி தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு பின்னால் சென்றார்கள். 
மேடைகளில் இளைஞர்களை சூடேற்றிய தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர்களுக்கு தமிழ் இளைஞர்கள் பிளேட்டினால் தமது கைகளைக்கீறி அதில் இருந்து வழிந்த இரத்தத்தால் அந்தத்தலைவர்களுக்கு பொட்டுவைத்தார்கள். சிரித்த முகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இளைஞர்களின் இரத்தப்பொட்டை வாங்கிக்கொண்டார்கள். இப்படிக் கையைக்கீறி  இரத்தப்பொட்டு வைக்கக்கூடாது என்று அன்று தடுத்து  நிறுத்தாமல்விட்டதின்விளைவுதான் பின்னர் தமிழ்மக்களின் அநியாய அழிவுக்கு வித்திட்டது. அன்று இட்ட அந்த இளைஞர்களின் இரத்தம் இவர்களின் சிலரது நெற்றியில் இன்றும் இருக்கின்றது. இவர்கள் இப்போது தமிழர் தேசிய கூட்டமைப்பில் (ரி.என்.ஏ) எம்.பியாகவும் அக்கட்சிகளில் இணைந்துள்ள தலைவர்களாவும் உள்ளனர்                       தம்மை எதிர்ப்பவர்களுக்கு இயற்கை மரணம் இல்லை அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என்று முழங்கிய காசி ஆனந்தன் இன்று ஆனந்தமாக இந்தியாவில் இருக்கின்றார். இப்படியாக கொலைசெய்யத் தூண்டிவிட்டு ஆயிரக்கணக்கான மரணத்திற்கு காரணமானவர்கள் இன்று இவர்கள் காந்தியவாதிகளாகவும் அகிம்சாவாதிகளாகவும் மதிக்கப்படுகின்றனர். கொலைசெய்பவனைவிட கொலைக்கு உடந்தையாக இருப்பவர்களுக்குத்தான் சட்டத்தில் தண்டனை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழர் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி  மாகாணசபைக்காலத்தில் அவரால் தலைமைதாங்கப்பட்ட மண்டையன் குழுவினர் புரிந்த நூற்றுக்கணக்கான படுகொலைகள்   உதாரணமாக மட்டக்களப்பு- திரிகோணமலை கத்தோலிக்க ஆயர் கிங்ஸ்சிலி சுவாம்பிள்ளையின் சகோதரரும் யாழ்சென் பற்றிக்ஸ்கல்லூரி ஆசிரியருமான சுவாம்பிள்ளை அவர்கள் வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணானந்தம் அவர்கள் கொலைசெய்யப்பட்டார். மற்றும் முரசொலி ஆசிரியர் திருந்செல்வத்தை கொலைசெய்யசென்றவேளை அவர்தப்பியோடிவிட அவரது ஒரேஓரு மகனான யாழ்சென்யோன்ஸ் கல்லூரி மாணவதலைவனான அகிலனை சுட்டுக்கொன்றார்கள். தந்தைக்காக மகனை படுகொலைசெய்யும் காட்டுமிராண்டித்தனத்தை புரியவைத்தவரின் பாவங்கள்  இன்று எப்படி கழுவப்பட்டு புனிதர்கள்  ஆனார்கள்? ஆமாம் தமிழர் தேசிய கூட்டமைப்பில் (ரி.என்.ஏ) இணைந்துவிட்டால் இது எல்லாம் கருணைக் கொலைகள் ஆகிவிடும் என்பதே இன்று உள்ள நிலைமை.                        இப்படியாக பல பிரமுகர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். சுருங்கச்சொல்லப்போனால் புலிகள் இயக்கத்திற்கு அடுத்தபடியாக அதிகமானதமிழர்களை படுகொலைசெய்தது இவரது மண்டையன்குழுவாகும்.  இதைவிட ஒவ்வொருநாளும் காலையில் வீதிகளில் சுட்டுப்கொல்லப்பட்ட மனித உடல்கள் ஏராளம்                                                  யாழ்ப்பாண மக்களை பயத்தில் ஆழ்த்திய இன்னுமொரு விடயம் பிள்ளைபிடிகாரர் பிரச்சினை யாழ்ப்பாணம் அசோகா விடுதியில் இவர்களது முகாம் இருந்தது  காலையில் வான்களை அனுப்பி பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்களை பலாத்காரமாக பிடித்து இழுத்து வானுக்குள் ஏற்றி செல்வது. கோவிலுக்கு செல்வோரை பிடித்தச்செல்வது இதனால் வாகனங்களை கண்டவுடன் பிள்ளைபிடிகாரர் வருகிறான்கள்  என்று பயத்தினால் ஒடி ஒழித்தனர் இந்த பலாத்காரமான  பிள்ளைபிடியினால் பெற்றோர்கள் தமதுபிள்ளைகளின் படிப்பைவிட அவர்களின் உயிர்தான் முக்கியம் எனக்கருதி அகதிகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டது.  தமது பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்துச்சென்றவடன்  பெற்றோர்கள் அசோகா விடுதி முகாமிற்கு படையெடுத்து சென்று அழுது ஒப்பாரி வைத்து பிடித்துச்செல்லப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கும்படி அழுதபோதும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடவேண்டும் அந்த அசோகா விடுதியில் தலைமை பொறுப்பில் இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் பிடித்துச்செல்லப்பட்ட மாணவனின் தாயார் ஒருவர் தன்னுடைய மகன் சின்னப்பிள்ளை என்றும் அவனுக்கு அறிவு காணாது என்றும் அவரைவிடுவிக்கும்படி கெஞ்சிக்கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த  சுரேஸ் பிரேமச்சந்திரன் அவனுக்கு அறிவு இல்லை என்றால் நாங்கள் பிடிக்கவில்லை கட்டாயம் புலிகளிடம்தான் போயிருப்பான் என்று சிரித்தபடி பலருக்கு முன்னால் நகைச்சுவையாக கூறியிருக்கின்றார். இவரின் இந்த நடவடிக்கைகளை சக அங்கத்தவர்கள் எதிர்த்தார்கள் இப்படி பலாத்காரமாக பிள்ளைகளை பிடிப்பதால் அவர்கள் நின்றுபிடிக்கமாட்டார்கள் எனச் சொல்லியும் கேட்கவில்லை.
அடுத்ததாக கூட்டமைப்பு எம்.பியும் புலிகளின் மேல்மட்டத்தளபதியான கேணல் தீபனின் சகோதரியை மணம் முடித்தவரும் வட்டக்கச்சி கிளிநொச்சி மகாவித்தியாலத்தில் அதிபராக இருந்தபோது புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு பெற்ற வயிறுகள் பற்றி எரிய தனது பாடசாலையில்  இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக இயக்கத்திற்கு அனுப்பி வைத்து அவர்களை மாவீரர்கள் ஆக்கியும் யுத்தத்pல் உடல் உறுப்புக்களை இழந்தும் இராணுவத்தின் பிடியில் சிக்கி தமது எதிர்காலத்தைதொலைக்க காரணமாக இருந்தவர் சிறிதரன் எம்.பி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் உண்ணாவிரதம் ஊர்வலம் என்று  1958ம் ஆண்டுக்கு  தமிழர் போராட்டத்தை கொண்டு சென்றுவிட்டார்கள். இனிமேல் ஊடகங்களில் முக்கியமாக இவர்கள்தான் இடம்பிடிப்பார்கள்  செல்வாக்குகளும் இவர்களுக்குத்தான் தமிழர் வாக்குகளும்  இவர்களுக்குத்தான்.                பத்திரிகைகளிலும் பாராளுமன்றத்திலும் அடுத்த நடவடிக்கை என்பார்கள் ஆனால் பாராளுமன்ற பதவியை இறுகப்பிடிப்பார்கள்.  இப்படியே தமது பதவியை தக்கவைத்துக்கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரச்pனைகள் வளர்வதற்கு வழிவகுகின்றார்கள். இனவாதம் என்ற இலகுவான ஆயுதத்தை பழையபடி தூக்கியுள்ளார்கள் அரசாங்கம் தவறு இழைக்கின்றது என்றால் அரசாங்கத்தின் எதிரிகளுடன் கூட்டுச்சேர்ந்தால் வெளிநாடுகளோ கட்சிகளோ இதுதான் அரிய சந்தர்ப்பம் என்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிடுவார்கள். இது அரசுக்கும் பலவழிகளிலும் நன்மையாக இருக்கப்போகின்றது.                                                   சிங்களக்குடியேற்றம் இராணுவ அத்துமிPறல் என்கிறார்கள் கடந்த 50 வருடங்களாக பாராளுமன்றத்தில்   அங்கம் வகிக்கின்றார்கள் கட்டுப்படுத்தமுடிந்ததா? அல்லது குறைக்க முடிந்நதா? இல்லவே இல்லை
அயல்நாட்டோடு  பகைக்கும்  அலுவல்களையும் தொடங்கியுள்ளார்கள் அவன் இன்றி எந்த அணுவும் அசையாது என்பதும் இவர்களுக்கு புரியாயது என்றும் இல்லை. இந்தியாவின் ஆதரவின்றி இன்றி தமிழர் பிரச்சினையை தீர்க்க எவராலும் முடியாது என்பது சிறுகுழந்தைக்கும் தெரியும்   கூட்டமைப்பினர் தமிழர் நலனுக்காக அல்லாமல் தங்கள் நலனுக்காகவும் பேரும் புகழுக்காகவும் மட்டுமே இவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றது. தமிழர் பிரச்சினையை வேறு பிரச்சினையாக உருவாக்க இவர்கள் உறுதுணையாக இருக்கப்போகின்றார்கள். எஞ்சியுள்ள தமிழர்களையும் பாதாளத்தில் தள்ளிவிடப்போகின்றார்கள் தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடியும்விடுவார்கள் .
நக்கீரன்

கருத்துகள் இல்லை: