செவ்வாய், 1 நவம்பர், 2011

இளையராஜா மனைவி உடல் நாளை அடக்கம்!.

இளையராஜாவின் மனைவி ஜீவா (60) உடல் நாளை பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவா இறந்தார். அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆர்.எம். வீரப்பன், லதா ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, சுகாசினி, தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், ராம நாராயணன், இயக்குனர்கள் மகேந்திரன், பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், அமீர், ஹரி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இளையராஜாவின் அக்கா கமலத்தின் மகள் ஜீவா. 1970ல் இளையராஜா-ஜீவா திருமணம் நடந்தது. அவர்களது மகன்கள் இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி. தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாயின் சமாதி உள்ளது. அதன் அருகே ஜீவாவின் உடல் நாளை அடக்கம் செய்யப்படும் என இளையராஜாவின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: