புதன், 2 நவம்பர், 2011

நாளை ஜாமீனில் விடுதலையாவாரா கனிமொழி?: டெல்லியில் அழகிரி, ஸ்டாலின்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொனியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி திமுக மத்திய அமைச்சரான அழகிரி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் டெல்லி செல்கிறார்.
இந்த ஜாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகின.
ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை நாளைக்கு (நவம்பர் 3ம் தேதிக்கு) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார். அதன்படி நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.இந் நிலையில் கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியது.
இதற்கு சிபிஐ தந்த விளக்கத்தில், 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி நாளை விடுதலை ஆவார் என்று திமுக தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதே போல திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை டெல்லி செல்கிறார்.
மேலும் டி.ஆர். பாலு உள்பட அனைத்து திமுக எம்பிக்களும், சில முன்னாள் மாநில அமைச்சர்களும் டெல்லி செல்கின்றனர்.
இருப்பினும் ராசா மட்டும் இதுவரை ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: