வியாழன், 13 அக்டோபர், 2011

கனிமொழி ஜாமின் மனு: சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி

புதுடில்லி: "ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்க மாட்டோம் என சொல்வதா' என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர். மேலும் இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா என, கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். ஆனால், சி.பி.ஐ., தரப்பில் வாதாடியவர்கள், கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்கும் முடிவில் தொடர்ந்து இருப்பதாக விளக்கம் அளித்தனர்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ., கோர்ட், தொடர்ந்து மறுத்து விட்டது.
தற்போது இந்த வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகருவதால், கனிமொழிக்கு ஜாமின் வழங்குவதை சி.பி.ஐ., எதிர்க்காது என்ற செய்தி, மீடியாக்களில் பரவலாக வெளியானது.ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா மற்றும் ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா ஆகியோரது ஜாமின் மனு தொடர்பான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. நீதிபதிகள் எஸ்.எஸ்.சிங்வி மற்றும் எச்.எல்.தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விசாரணையை மேற்கொண்டது.

அப்போது, "கனிமொழிக்கு ஜாமின் கொடுப்பதை சி.பி.ஐ., எதிர்க்காது' என்று வெளியாகியுள்ள செய்தி தங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது' என்று காட்டமாகக் கூறிய நீதிபதிகள், சி.பி.ஐ., சார்பில் ஆஜராக வந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவலிடம் சில கேள்விகளை எழுப்பி, அறிவுரையும் வழங்கினர். "சி.பி.ஐ.,யில் உள்ள பொதுத் தொடர்பு அதிகாரிகள் இது போன்ற தவறான தகவல்களை அளிக்கக்கூடாது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா?' என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, "ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமினை மறுக்கும்படி கோருமாறு எனக்கு சி.பி.ஐ., சார்பில் அறுவுறுத்தப்பட்டுள்ளது' என்றார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்.

குர்ஷித் கருத்துக்கு கண்டனம்: அடுத்ததாக மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்த கருத்து பற்றியும் நீதிபதிகள் ஒரு பிடி பிடித்தனர்.இது குறித்து நீதிபதிகள் குறிப்பிடுகையில், "தொழிலதிபர்களை சிறையில் அடைப்பதால் முதலீடுகள் பாதிக்கப்படும் என, அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இது சரியா, தவறா? என்றனர். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி குறிப்பிடுகையில், "செய்தி சரியானது தான்' என்றார். சொலிசிட்டர் ஜெனரல் அமைச்சரின் கருத்தை ஆதரிக்கிறாரா என கேட்ட நீதிபதிகள், "தொழிலதிபர்களை சிறையில் அடைப்பதில் நாங்கள் ஆர்வம் காட்டுவது போல அமைச்சரின் பேச்சு உள்ளது. இது எங்களை இடையூறுக்கு உள்ளாக்குகிறது. எனினும் அரசின் இந்த முடிவு, கோர்ட் நடவடிக்கையை பாதிக்காது' என்றனர்.

சி.பி.ஐ., நடவடிக்கைக்கு எதிர்ப்பு: இதனிடையே. சி.பி.ஐ., தங்கள் மீது புதிய குற்றச்சாட்டை பதிவு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து, டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா மனு செய்துள்ளார்

கருத்துகள் இல்லை: