வெள்ளி, 14 அக்டோபர், 2011

குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி

சென்னை:போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கரணை ராஜேஷ் நகர் நேரு தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவர் நேற்று காலை தனது மகள் ராஜேஸ்வரி, மருமகன் சக்திவேல், பேரன், பேத்தியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனரை சந்திக்க அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த சந்திரா, மகள், மருமகன், பேரன், பேத்தியுடன் கமிஷனர் அலுவலகம் வாசலில் வந்து நின்றார்.அப்போது அந்தவழியாக வந்த பட்டினப்பாக்கம் செல்லும் தடம் எண் 27டி மாநகர பஸ் முன்பு குடும்பத்துடன் பாய்ந்தார். டிரைவர் உடனே பிரேக் போட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். பிறகு சந்திரா, மருமகன் சக்திவேல் அவரது மகன் சக்தி ஆகியோர் பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டனர். “என்னுடைய நிலம் போச்சு, நிலம் போச்சு‘‘ என்று கத்தினர். போலீசார் எவ்வளவோ கூறியும் அவர்கள் பஸ்சுக்கு அடியில் இருந்து வர மறுத்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக மீட்டு கமிஷனர் அலுவலகத்திற்குள் இழுத்து சென்றனர்.

பின்னர் சந்திரா கூறுகையில், “நான் 18 வருடமாக அதிமுக உறுப்பினராக உள்ளேன். எனக்கு சொந்தமாக சைதாப்பேட்டை சின்னமலை கக்கன்புரத்தில் முக்கால் கிரவுண்ட் நிலம் இருந்தது. அதனை ஒருவர் திட்டமிட்டு அபகரித்து விட்டார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. “இது பெரிய இடத்து விவகாரம் அதில் தலையிட வேண்டாம்“ என்று அங்குள்ள போலீசார் எங்களை மிரட்டுகிறார்கள்.

அதனால்தான் முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்தேன். தற்போது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய வந்தேன். ஆனால் உள்ளே விட மறுக்கின்றனர். அதனால் இப்படி செய்தேன். எனது நிலத்தை மீட்டு கொடுப்பது போலீசின் கடமை“ என்றார். பிறகு அவர்களை எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்று எச்சரித்து அனுப்பினர்.

பஸ் டிரைவருடன் போலீஸ் வாக்குவாதம்: பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்ட சந்திராவையும் அவரது குடும்பத்தினரையும் வெளியே வருமாறு போலீசார் கூறியும் அவர்கள் வர மறுத்து விட்டனர். அங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகமானதால் திகைத்த போலீசார், பஸ்சை ரிவர்சில் எடுக்குமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், ‘எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்‘ எனக்கூறி டிரைவர் மறுத்துவிட்டார். இதனால் டிரைவருக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு போலீசார் பெரும்பாடு பட்டு சந்திராவையும், அவரது குடும்பத்தினரையும் பஸ்சுக்கு அடியில் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.

2வது முறை தற்கொலை முயற்சி

பஸ் முன்பு தற்கொலைக்கு முயன்ற சந்திரா, நிலமோசடி குறித்து முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க வந்த அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. அதனால் தலைமைச்செயலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தற்போது கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: