புதன், 12 அக்டோபர், 2011

கனேடிய பிரதமர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்.

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்;த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை ஜனாதிபதியை, பிரதமர் ஹார்பர் சந்திக்க எதிர்பார்ப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையின் ஹம்பாந்தொட்டையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கனேடிய பிரதமர் பகிஷ்கரிக்க மாட்டார் என கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் விருத்தி ஏற்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஹார்பர் அறிவித்திருந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படாமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாமை போன்ற பிரச்சினைகள் நீடித்தால் இலங்கை மாநாட்டில் கலந்து கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் என்றே பிரதமர் ஹார்பர் தெரிவித்ததாகவும், மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக அறிவிக்கவில்லை எனவும் புருஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்பதே கனடாவின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம் தீர்வு காண்பது பொருத்தமாக அமையும் எனினும், அதனை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுயாதீன விசாரணைகள் அவசியமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள் காரணமாக பழைய நட்பு நாடுகளிடமிருந்து இலங்கை விலகிச் செல்லக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த நாட்டுடன் உறவுகளைப் பேண வேண்டுமென்பது குறித்து அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை, யாருடன் நட்பு பாராட்ட வேண்டும் என்பதனை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை நாடான அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவுகளை பேணி வரும் கனடா, கியூபாவுடனும் உறவுகளைப் பேணி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: