செவ்வாய், 11 அக்டோபர், 2011

தயாநிதி, சன் டி.வி. ரெய்டு ரகசியம் கலாநிதியைக் குறிவைத்து


Viruvirupu,
சென்னை, இந்தியா: தயாநிதி மாறன் வீட்டில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சி.பி.ஐ. ரெய்டு, முற்று முழுதாக 2ஜி-ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு தொடர்பு கொண்டதல்ல என்கின்றன சி.பி.ஐ. வட்டாரங்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சலுகை காட்டிய விவகாரம் பற்றியதல்ல இந்த நடவடிக்கை என்கிறார்கள் அவர்கள்.
நேற்று நடைபெற்ற ரெய்டு, மாறன் சகோதரர்களின் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான தேடுதல் வேட்டை மாத்திரமே.
இவற்றில் சில, இவர்களுக்கு பணம் வந்த விதம் பற்றியவை. வேறு சில, சன் டி.வி.யின் பைனான்ஸ் விவகாரங்கள் தொடர்பானவை என்று தெரியவருகின்றது.

சி.பி.ஐ. வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களில் இருந்து, தயாநிதி மாத்திரமன்றி, கலாநிதியும் இந்த விவகாரத்தில் சிக்கிக் கொள்ளலாம் என்று தெரிகின்றது. காரணம், சன் டி.வி. பைனான்ஸ் விஷயங்களில் செய்யப்பட்ட ட்ரான்ஸாக்ஷன்கள், தயாநிதியோடு ஓரளவுக்கு மேல் தொடர்பற்றவை. ஆனால், கலாநிதியை மாட்டிவிடும் விதத்தில்தான் உள்ளதாக தெரிகின்றது.
மொத்தத்தில் நேற்று நடைபெற்ற ரெய்டு, தயாநிதியை மையப்படுத்தி நடாத்தப்பட்டது என்பதுபோல மீடியாக்களில் அதிகம் அடிபட்டாலும், அவை கலாநிதியைக் குறிவைத்து நடாத்தப்பட்ட ரெய்டு என்றே சி.பி.ஐ. தரப்பிலிருந்து அறிய முடிகின்றது.
நேற்று காலை ரெய்டு சென்ற அதிகாரிகளிடம் இருந்த ப்ரீலிமினரி செக்-லிஸ்ட்டிலும், சன் டி.வி.யை தொடர்பு படுத்தும் விஷயங்களே அதிகம் இருந்திருக்கின்றன. ஒரு இடத்தை ரெய்டு செய்யச் செல்லும்போது, சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் தேடுதலுக்கான ஆணையுடன் வழங்கப்படுவதுதான் இந்த ப்ரீலிமினரி செக்-லிஸ்ட்.
வழமையான சி.பி.ஐ.யின் ப்ரீலிமினரி செக்-லிஸ்ட் (டில்லியில் இதை ப்ரீலிம்-செக் என்பார்கள்), டில்லியில் இருந்தே வந்து சேரும். அதைப் படித்து, அதிலிருப்பதை புரிந்து கொண்டாலே போதும், குறிப்பிட்ட ரெய்டு எதற்காக நடாத்தப் படுகின்றது என்ற ஆணிவேரைப் பிடித்து விடலாம்.
நேற்று சென்னையில் ரெய்டு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர், தமக்கு கொடுக்கப்பட்ட ப்ரீலிம்-செக்கை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் என்று கூறப்படுகின்றது. காரணம், அவைற்றில் பட்டியில் இடப்பட்டிருந்த விஷயங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே சன் டி.வி.யுடன் தொடர்புடையவையாக இருந்தன.
இந்த லிஸ்ட்டின் அடிப்படையிலேயே, தேடுதலை மேற்கொண்டார்கள் அதிகாரிகள்.
எமக்குக் கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, சி.பி.ஐ. எஸ்டாபிளிஷ் பண்ண விரும்புவது மொத்தம் 3 விஷயங்களை என்று புரிகின்றது.
1- தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது செய்த சில காரியங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்ட பணம், எதற்காக சன் டி.வி. ஊடாக திருப்பி விடப்பட்டது?
2- சன் டி.வி.யின் அதிகாரபூர்வ பெனிஃபிஷராக இல்லாத தயாநிதிக்கு, குறிப்பிட்ட பணத்துக்கான ஆக்ஸஸ் உள்ளதா? (அதாவது, இந்த பணம் நேரடியாக கலாநிதிக்குதான் செல்லும். அது சுற்றி வளைத்து தயாநிதிக்கும் செல்ல முடியுமா?)
3- வழக்கு நடக்கும்போது, சன் டி.வி. நிர்வாகத்தில் பிரதான பங்கு வகிக்காத தயாநிதி, சிம்பிளாக, “இதற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது” என்று கழன்று கொள்ள முடியும். அதைத் தகர்க்கும் விதத்தில், சன் டி.வி.க்கும் தயாநிதிக்கும் உள்ள தொடர்பை ஆதாரபூர்வமாகவும் சட்ட ரீதியாகவும் நிரூபிக்க முடியுமா?
ரெயிடு நடைபெற்ற போது வீட்டு வாயிலில்...
எம்மிடமுள்ள தகவல்களின்படி, இதற்காகவே நேற்றைய ரெய்டு நடாத்தப்பட்டது.
டில்லி சி.பி.ஐ.யின் அடிஷனல் சூப்ரின்டென்டட் ரவி காம்பிரைத்தான் இதை நடத்திக் கொடுக்க நியமித்துள்ளது சி.பி.ஐ. தலைமை அலுவலகம். இந்த ஆபரேஷனுக்காக அவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஏழு பேரைக் கொண்டது. இவர்கள்தான், பர்ஸ்ட் அவன்யூவிலுள்ள தயாநிதி வீட்டுக்கு ரெய்ட் செய்யச் சென்றவர்கள்.
தயாநிதி இல்லத்துக்குள், சி.பி.ஐ. குழு தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட பின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சட்டரீதியான நடைமுறை தெரிந்திருக்க வேண்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இப்படி நடைபெற்றதை, வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் சி.பி.ஐ. முறையிட முடியும். ஆனால் சி.பி.ஐ., அப்படிச் செய்வார்களா என்று தெரியவில்லை.
வாயிலில் கிட்டத்தட்ட அரை மணி நேரக் காத்திருப்பின்பின், இறுதியில் சி.பி.ஐ. குழு தயாநிதி மாறனின் இல்லத்துக்கு உள்ளே சென்றதுகூட, வீட்டில் இருந்தவர்களால் அனுமதி வழங்கப்பட்டு அல்ல. தயாநிதி வீட்டு பணியாள் ஒருவர் உள்ளே செல்ல கதவு திறக்கப்பட்ட போது, அவருடன் சேர்ந்து கதவை பலாத்காரமாக திறந்துகொண்டே சி.பி.ஐ. குழு உள்ளே செல்ல முடிந்திருந்தது.
அதன்பின்தான் தயாநிதி இல்லம், சி.பி.ஐ. குழுவின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தேடுதல் வேட்டை தொடங்கிய உடனேயே, இது சன் டி.வி.யுடன் தொடர்பு கொண்டது என்பதை வீட்டில் இருந்தவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் (தயாநிதி வீட்டில் இல்லை) அதனால், சன் டி.வி. நிர்வாக அதிகாரிக்கு (ஆர்.எம்.ரமேஷ்) தகவல் கொடுத்து, அவரை தயாநிதி இல்லத்துக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார்கள்.
ஆனால், ஆர்.எம்.ரமேஷை, சி.பி.ஐ. குழு உள்ளே விடவில்லை. அதன் பின்னரே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காவது மகன் தமிழரசு அனுப்பப்பட்டார். வீட்டு உரிமையாளர் (தயாநிதி) டில்லியில் இருப்பதால், உறவினர் என்ற முறையில் ரெய்டு நடக்கும்போது தானும் உடனிருக்க வேண்டும் என்று தமிழரசு கேட்டதால், அனுமதிக்கப்பட்டார்.
ப்ரீலிம்-செக்கில் இருந்தபடி, தயாநிதி வீட்டுக்கும் சன் டி.வி.க்கும் என்ன தொடர்பு என்பதைக் காட்டும் ஆதாரங்களைச் சேகரிக்க முயன்றது சி.பி.ஐ. டீம். தயாநிதி அமைச்சராக இருந்தபோது, அவரது வீட்டுக்கு கொடுக்கப்பட்ட சட்ட விரோத இணைப்புகள் சன் டி.வி.யால் பயன்படுத்தப்பட்டது பழைய குற்றச்சாட்டு.
அந்த கனெக்ஷன் லைன்கள் எதுவும் தற்போது தயாநிதி இல்லத்தில் இல்லை.
ஆனால், முன்பு கனெக்ஷன் கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் ஏதாவது உள்ளனவா என்று பார்த்தார்கள். அப்படியான இணைப்புகள் அங்கிருந்து கொடுக்கப்படுவது சாத்தியமா என்பதை உறுதி செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளால் டெக்னிகலாக முடியாது.
மொட்டை மாடியில் ஏறி இறங்கும் அதிகாரிகள்
இதனால், அரசு தொலைத் தொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல். சென்னை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, டெக்னிக்கலான விளக்கம் கொடுக்கக்கூடய யாரையாவது அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பி.எஸ்.என்.எல். அனுப்பி வைத்த இரு அதிகாரிகள் மதியம் 12.15 மணி அளவில் வந்து சேர்ந்தார்கள். தயாநிதி வீட்டில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை அவர்கள் ஆராய்ந்தார்கள். இந்த இணைப்புகளில் வழமைக்கு மாறாக வந்து கொண்டிருந்த பவர்ஃபுல் சிக்னல்கள் பற்றி அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
இந்த சிக்னல்கள், தயாரிதி வீட்டு மொட்டை மாடியில் இருந்து வருவது தெரிந்தது. அதையடுத்து, பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தயாநிதி வீட்டு மொட்டை மாடிக்கு ஏறியபோது சி.பி.ஐ. அதிகாரிகளும் கூடவே சென்றார்கள். அங்கே அமைக்கப்பட்டிருந்த ரிசீவிங் அன்டு ட்ரான்ஸ்மிஷன் டிஸ்குகளை பரிசோதித்து, போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
ப்ரீலிம்-செக்கில் இருந்தவை சன் டி.வி. பற்றியவை என்பதால், அதற்குமேல் தயாநிதி இல்லத்தில் சோதனையிட தேவை ஏதும் இருக்கவில்லை. இதனால், பிற்பகல் 3 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
அங்கிருந்து சென்றவர்கள், குறிப்பிட்ட இந்த ட்ரான்ஸ்மிஷன் டிவைஸ் பற்றி சில விபரங்களை டில்லியுடன் டிஸ்கஸ் செய்ததாக தெரிய வருகின்றது. இந்த டிவைஸ், எவ்வளவு பவர்ஃபுல் சிக்னல்களை, எத்தனை ரிசீவிங் என்ட்களுக்கு கொடுக்கக்கூடியது என்ற விபரத்தை சேகரிக்குமாறு டில்லியில் இருந்து கூறப்பட்டது.
அதையடுத்து, மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் தயாநிதி இல்லத்தைச் சென்றடைந்தபோது நேரம் மாலை 4 மணி ஆகிவிட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் தம்முடன் பி.எஸ்.என்.எல். அதிகாரிகளையும் அழைத்துச் சென்றிருந்தார்கள்.
இம்முறை வீட்டுக்குள் தாமதிக்காமல், நேரே மொட்டைமாடிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த டிவைஸை ஆராய்ந்தார்கள். இவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில், டில்லி ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட பியட் காரில், சி.பி.ஐ. தடயவியல் இலாகா அதிகாரி ஒருவர் வந்து சேர்ந்தார்.
சி.பி.ஐ. தடயவியல் இலாகா அதிகாரியின் கேள்விகளுக்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் டெக்னிகலான விளக்கங்கள் சிலவற்றைக் கொடுத்தனர். அங்கிருந்த டிவைஸ், கொடுக்கப்பட்டிருந்த இணைப்புகள் மற்றும் அது பொருத்தப்பட்டிருந்த டவர் ஆகியவற்றை ஆராய்ந்த தடயவியல் இலாகா அதிகாரி, அவற்றை வீடியோ எடுத்தபின், மாலை 5.15 அளவில் அனைவரும் வெளியேறினர்.
இருந்து பாருங்கள். சி.பி.ஐ.யின் குற்றப் பத்திரிகையில் தயாநிதிக்கும் சன் டி.வி.க்கும் உள்ள தொடர்பை எஸ்டாபிளிஷ் பண்ண முயலப் போகிறார்கள். சன் டி.வி. கலாநிதியும் இதற்குள் கொண்டுவரப் படலாம்.
-சென்னையிலிருந்து கலியபெருமாள்,  டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜி ஆகியோரின் குறிப்புகள், மற்றும் சி.பி.ஐ. டில்லி அலுவலக தகவல்களுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: