புதன், 12 அக்டோபர், 2011

புலிகளினாலும் முஸ்லிம்கள் உரிமைகளை இழந்தார்கள். சொல்லுங்கள் யாரில் இருந்து போராட்டத்தை ஆரம்பிக்கட்டும்?

முஸ்லிம்களுக்கு உரிமை தேவையெனில் போராடுங்கள் என அறிவுரை பகர்ந்த கௌரவ (புலிகளது) பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு!


உரிமை தேவையென்றால் போராட வேண்டும். அதைவிடுத்து அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்து கொள்ளவேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது?
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மகிந்த வீடு தேடிப்போய்க்கூடப் பேசியிருக்கிறார். அப்படியிருக்க முஸ்லிம் அமைச்சர்களுடன் ஏன் பேசக் கூடாது? இதற்கு ஹக்கீடம் என்ன பதில் சொல்லப்போகிறார்”புலிகளினாலும்கௌரவ சுரேஸ் பிரேமசந்திரன் அவர்களே இவை நீங்கள் கடந்த 04.10.2011அன்று கல்முனையில் இடம் பெற்ற உள்ளுராட்சி தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பேச்சின் ஒரு கீற்று.

ரஉப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்தில் உரிமைகளை தட்டிக்கேட்டு கட்டிக்காத்து வெண்றுவரப்போவதாக வாக்குவேட்டையின் போது வழமை போல வாக்காளர்களை கிளர்ச்சியூட்டுவதற்காக எடுத்து விட்ட சவடால் ஒன்றுக்காக நீங்களும் பதிலுக்கு எடுத்து விட்ட சவடாலாகக்கூட மேற்படி தங்கள் கூற்று இருக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் சார்பாக இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டவிடமுடியாது. அதாவது “ஒருவருக்கு உரிமை தேவையென்றால் போராட வேண்டும்” என்ற உங்களது புத்திமதி ரஊப் ஹக்கிம் அவர்களுக்கு சம்டைம் உறைக்கலாம் ஒருவேளை உறைக்காதும் போகலாம். அதனையிட்டு முஸ்லிம்கள் அலட்டப்போவதில்லை. ஏனெனில் த.தே.கூட்டமைப்பினராகிய நீங்களும் மற்றும் ஹக்கீமும் இன்றைக்ககு கொத்திக் கொள்ளும் நீங்கள் நாளைக்ககே கட்டிக்கொள்ளலாம். கட்டிக் கொண்டு புதிய பாதையில் கைவீசிப் புறப்படலாம். எதுவும் சாத்தியமே. ஏனெனில் சிறுபான்மையினராகிய முஸ்லிம்களையும், தமிழர்களையும் மிகக் கீழ்த்தரமாக ஏசிப்பேசி இனவாதத்தைப்படு பயங்கரமாக வெளிப்படுத்திய அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பான சரத் பொன்சேக்காவை உங்கள் சுயநலன்களுக்காக ‘சிறுபான்மையினரின் மீட்பர்’ என்றுகூறி அவரை ஜனாதிபதியாக்க ஓடுப்பட்டுத்திரிந்த இனப்பற்றாளர்கள் தான் நீங்கள் இருதரப்பாரும்.

ஆதலால் சிறுபான்மை இனங்களினது அர்த்தமுள்ள சுபீட்சத்தை நேசிப்பவன் என்ற வகையில் உரிமை தேவையெனில் போராடுங்கள என முஸ்லிம்களுக்கு நீங்கள் கூறும் புத்திமதி குறித்த எனது ஆட்சேபனையையும் கண்டிப்பையும் தெரிவிததுக் கொள்கின்றேன். (இது ஹக்கிமுக்காக வாங்கும் வக்காளத்து என எடுத்துக் கொள்ளமாடடீர்கள் என நம்புகின்றேன்.) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்; முஸ்லிம்களின் வாழ்வியலையும் அரசியலையும் புரிந்து கொண்டவனென்றவகையில் ஹக்கீமுக்கில்லாத அக்கறையை நான் எடுத்துக்கொள்ள சகல உரித்தும் எனக்குமுண்டு. ஒருவகையில் உங்களது கூற்றுக்கு பதிலாக-எங்கள் உரிமையை காவு கொண்டது தமிழ்ப் பேரினவாதமும் தீவிரவாதமும் தான். அப்படியானால் உங்கள் வட கிழக்கு ஆட்சிக்காலம் முதல்

உங்கள் ஆயத இயக்கம் மூலமும் தான் முஸ்லிம்கள் உரிமைகளை இழந்தார்கள். சொல்லுங்கள் யாரில் இருந்து எங்கிருந்து போராட்டத்தை ஆரம்பிக்கட்டும்?

உரிமை தேவையெனில் போராடுங்கள் என்கிறீர்கள். நீங்களும் உரிமை பற்றிப்பேசுகிறீர்கள். முஸ்லிம் காங்கிரசும் தேர்தல் சீசனில் தேர்தல் மேடைகளில் போதும்போதும் என்ற அளவுக்கு உரிமைகளை வென்றுவந்து கொட்டிக் குவித்து வருகிறது. இத்தகைய சீசன் சிலிப்பு வகையறாக்களுள் ஒன்றாக உங்களது புத்திமதியை எடுத்துக் கொள்ளமுடியாது. ஏனெனில் உங்களுக்கு முன்பும் தமிழ்க்குறுந்தேசியவாதம் இத்தகைய குரோதங்களை வெளியிட்டிருக்கின்றது.

போராடாத உங்களுக்கு பேச்சில் என்ன பங்கு”

பேச்சில் பங்கு பற்ற எதனையிழந்தீர்கள்”

போன்ற மேற்படி கடந்த கால தமிழ்ப்பேரினவாதக்கருத்துக்கள் உங்கள் முகாம்களில் இருந்து வந்தவைதாம். அவற்றுக்கும் உங்களது கருத்துக்கும் ஓத்த சொற்பதங்கள் வேறுபட்டிருப்பினும் அதன் உள்ளிழையான தமிழ்ப்பேரினவாதம் அப்படியே உள்ளிருந்து ஒலிக்கிறது. அது எம் அரசியல் முகவர்;களுக்கு உறைக்கிறதோ இல்லையோ எமக்கு வலிக்கிறது.

கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே உரிமை என்பது போராடியவர்களுக்கு மட்டுமே என வரையறை செய்ய உங்களுக்கு யார் உரிமை தந்தார்? உரிமை என்பது. நீங்கள் சொல்வது போல் போராடியவர்களுக்கு மட்டுமானது மட்டுமல்ல. யாரெல்லாம் உரிமைகளையிழந்தார்களோ பறிகொடுத்தார்களோ அத்தனை தரப்பாருக்கும் உரிமை தேவை. மட்டுமல்லாமல் எந்தத்தரப்பாரிடம் உரிமை இழக்கப்பட்டதோ அத்தரப்பாரிடம் அதனை கேட்டுப்பெறவேண்டும். ஆகவே உரிமை குறித்து எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம்போய் இழந்த உரிமையை தட்டிக்கேட்டாக வேண்டும்.

அந்த வகையில் சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களது உரிமைகள் தமிழ் மற்றும் சிங்களப் பேரினவாதங்களால் பறிக்கப்பட்டுள்ளது. ஆதலால் எங்கெல்லாம் உரிமை பற்றிப்பேசப்படுகிறதோ எங்கெல்லாம் எம் உரிமையைப் பறித்தவர்கள் உட்கார்ந்து பேசுகிறார்களோ அங்கெல்லாம் முஸ்லிம் தரப்பு தன்னிடத்தை கேட்பது தானே சரியாக இருக்கும். என்பதில் மிதவாதிகளுக்கு எப்பொழுதும் ஆட்சேபனையிருக்காது. இப்படி நியாயத்தை முன்வைக்கையில் தழிழ்தரப்பு தன் உரிமை கேட்டு அரசுடன் பேசுகையில் முஸ்லிம்கள் ஏன் அதில் பங்கு பற்ற முற்பட்டு குழப்பவேண்டும்”என்ற கருத்தும் கடந்த காலத்தில் உங்கள் முகாமில் இருந்து அன்ரன் பாலசிங்கத்தால் கேட்கப்பட்டது தான்.

திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே தமிழ் மக்களது உரிமையைக் கேட்டு நீங்கள் அரசுடன் பேசுகையில் அதில் முஸ்லிம்களது உரிமைகள் ஆள்புல எல்லைகள் அதிகாரப்பகிர்வுகள்

என்பனவற்றுக்கு வேட்டுவைக்கப் படாதவிடத்து முஸ்லிம்களுக்கு அதில் தலையிட உரிமையில்லை என்பதை ஒருவகையில் ஒப்புக்கொள்கின்றேன்.

அதே நேரம் திம்பு முதல் நோர்வே வரை இழுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் ஆதாரசுருதி என்னவென்பதைப் பார்த்தால் இணைந்த வடகிழக்கு தமிழர் தாயகம், தமிழ் பேசும் மக்களுக்கான சுயநிர்ணயம் போன்ற தந்திரோபாய சொல்லாடல்களை; மையமாக வைத்துத்தானே பேசப்பட்டு வருகிறது.

ஏன் தமிழ் மக்களுக்கான…’ எனப்பேசலாம் தானே எதற்காக ‘தமிழ் பேசும் மக்கள’; என்ற தந்திரோபாய சொற்பதம்? அன்று சட்டசபையில் முஸ்லிம்களுக்கென்று தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை நானே போதும் என்று பொன் ராமனாதன் வீசிய சுருக்கை அப்போதே அதன் ஆபத்து விளங்கி அறிஞர் சித்திலெப்பை தனித்துவம் காக்கப் போராடி ஜனாப் அப்துர் ரகுமான் சட்டசபைக்கு சென்றதன் மூலம் ராமனாதனின் தந்திரோபாயம் அவர் கண்முன்னாலேயே தோற்கடிக்கப்பட்டும் ஏறக்குறைய ஒருநூற்றாண்டு பழைமையான தந்திரோபாயத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கமுற்படுவதை எப்படிப்பார்த்துக்கொண்டிருப்பது? தமிழைப்பேசுவதற்கும் பகரமாக தமிழை வளர்ப்பதற்குமான தண்டனையா?இந்த தமிழ்பேசும் மக்கள் தந்திரோபாயம்?

ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன். ‘தமிழ் பேசும் மக்களுக்கு என்ற தலைப்பில் நீங்கள் முஸ்லிம்களுக்குமாகப் போராடுங்கள என உங்களிடம் யார் கேட்டார்? எதற்காக எங்களுக்கான எல்லையை போடும் உரிமையை நீங்கள் போட ஆசைப்படுகிறீர்கள்? இது எப்படி இருக்கிறது என்றால், நவீனமாக ஒரு உவமை சொல்லவேண்டுமானால் ‘பலஸ்தீனின் சுயநிர்ணய உரிமைக்காக ஸ்ரேல் பாடுபடுவதாகச் சொன்னால; எப்படி இரக்குமோ அப்படியல்லவா இருக்கிறது! மட்டுமல்லாமல் கிழக்கின் பெரும்பான்மையினரான (57மூ)முஸ்லிம்களது நிலைப்பாட்டை யறியாது இணைந்த வடகிழக்கு தமிழர்தாயகம் என்றெல்லாம் ‘போட்’ போட்டுக் கொள்ளும் உரிமையை யார் தந்தது?

கிழக்கின் வாழ்வும் வளமும் எந்தவிதமான நாட்டாண்மைத்தனத்துக்கும் உட்படுவதை எப்போதுமே விரும்பாத பெரும்பான்மையான கிழக்கு வாழ் தமிழ் மக்கள்; கிழக்குடன் வடக்கு வந்தினைவதை விரும்பாத தம் நிலைப்பாட்டை பலமுறை நிருபித்டதாகி விட்டது. மட்டுமல்லாது வரலாற்றில் என்றுமே யாழ்ப்பாண ராச்சியத்தின் கீழ் இருந்திராத கிழக்கை இந்தியாவின் விருப்பிற்கிணங்க இணைத்து நடாத்தப்பட்ட சபை மூலம் ஏறக்குறைய ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக முஸ்லிம் களுக்கும் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும் புறக்கணிப்புகளையும் சொல்வதானால் அது ஒரு தனித்தலைப்பாக விரியும்(விரிவஞ்சி விடுவோம்) ஆக உரிமை போராட்டம் என்றபெயரில் யாரும் யாரையும் நாட்டாண்மை செய்யவதை அனுமதிக்கமுடியாது.

இந்த நாட்டாண்மை போக்குத்தான் கிழக்குப்புலிகள் பிரிந்து போகவும் அதன் இறுதி அத்தியாயம் வெள்ளைமுள்ளி வாய்க்கால் ஓரத்தில் எழுதப்படவும் அடியெடுத்துக் கொடுத்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. மாத்திரமன்றி முஸ்லிம்களுடனான புலிகளது ஆதிக்க பாசிசமனோபாவமே அதர்மம் அதர்மத்தால் அழியக்காரணமானது.

என்னதான் தமிழ்பேசும் மக்கள், இஸ்லாமியத் தமிழர் போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புக்களை காலத்துக்குக் காலம் வெளியி;டப்பட்டாலும் ‘முஸ்லிம்கள ;ஒரு தனி இனம் அவர்கள் அசட்டையாக இருக்குந்தோறும்; விழித்திருக்க விழிபிடுங்குவோம’; என்பதை புலிகள் எப்போதோ வெளிப்படுத்திவிட்டார்கள். சோனகத்தோடு தமிழ் மொழியையும் கலந்து பேசினாலும் முஸ்லிம்கள் ஒரு தனி இனம் என்பதால் தான ;முஸ்லிம்களது பூர்வீக நிலத்தில் இருந்து புலிகள் அவர்களை சூறையாடிக்கொண்டு இனச்சுத்திகரிப்புச் செய்தார்கள். தெழுகையில் சுட்டார்கள் .கோடிக்கணக்கில் கொள்ளையடித்தார்கள். லட்ச லட்ச மாய் கப்பம் பறித்தார்கள். உயிரோடு புதைத்தார்கள். சொத்துக்களுக்கு தீயிட்டு மகிழ்ந்தார்கள். ஆட்கடத்தி காசு கேட்டார்கள். இனந்தெரியாத நபர் என பத்திரிகைகள் புலிகளுக்குச்சூட்டிய பெயரால் முஸ்லிம் புத்திஜீவிகளும்,உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இத்தகைய அதர்மம் புரிந்த கொள்ளைக் கும்பலை, பாசிசப் பயங்கரவாதிகளை விடுதலை வேங்கைகளாக நீங்கள் வரித்துக்கொள்வதில் ஆச்சரியமோ ஆட்சேபனையோ எனக்கில்லை. அதேபோல முன்னாள் மீன்பிடி அமைச்சின் ஆலோசகரான நீpங்கள் உட்பட சிறி லங்கா அரசாங்கம் என்று மேடையில் பேசிக் கொண்டு தம் குடும்பத்தாரின் கல்வி பொருளாதார நலன்களுக்காக அமைச்சர்களை பின் கதவு வழியாக சந்திக்கும் ஏனைய கூட்டமைப்பார் ஈறாக அடுத்தவரைப்பார்த்து ‘அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள்’ என வர்ணிப்பதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. உங்கள் தலைவனைக் கொன்றவனையே தலைவனாக ஏற்று சாதனை புரிந்து. அதனை நியாயப்படுத்தும் ராஜதந்திரமும் வார்த்தை ஜாலமும் தெரிந்வர் நீங்கள். ஏன் இந்திய ராணுவ காலத்தில் நீங்கள முஸ்லிம் இளைஞர்களை சி வி எப்.ல் பிடித்து சேர்த்து ராணுவப்பயிற்சிக்கு; உட்படுத்தியதை நாங்கள் மறப்பதற்கில்லை. முஸ்லிம் பொலிசாரை மாத்திரம் வேறாகப் பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட இனக்குரோதம் உங்கள் மனதை விட்டு மறைந்திருக்காது என நினைக்கிறேன்.

திரு .சுரெஸ் பிரெமசந்திரன் அவர்களே,மேற்படி கொலை,கொள்ளை ஆட்கடத்தல் ,தீவைப்பு, சொத்தழிப்பு இனச்சுத்திகரிப்பு போன்றனவெல்லாம் எதேர்ச்சையான சாதாரன விடயம் அல்லது யுத்தம் ஒன்றின்போது நடக்கக்கூடியவிடயம்தான் அல்லது அன்ரன் பாலசிங்கத்தாரின் பாஸையில் ஒரு துன்பியல் சம்பவமொன்று மாத்திரமே என்று முஸ்லிம்கள் கருதிக்கொண்டு பழசையெல்லாம் பெரிசுபடுத்திக் கொண்டிராமல் வாளாவிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? (நீங்கள் தேவையென்றால் 1956க்கு முன்னிருந்தும புள்ளிவிபரத்தோடு பாயலாம்?);

மேற்படி அராஜகம் அத்தனையும் நன்கு திட்டமிடப்பட்ட இனக்குரோதம் நிறைந்த தழிழ் பேரினவாதம் என்பதை மறுத்துவிடப்போகிறீர்களா? தமிழ் பேசும் மக்கள் என்ற சுருக்கு முதல் இனச்சுத்திகரிப்பு வரையான தமிழ்ப்பேரினவாதச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியல் பரிமானம் உடையவை முஸ்லிம்களது சுயநிர்ணயத்தை மறுதலிப்பவை என்பதை மறைத்துவிடப்பார்க்கிறீர்களா?

தமிழ் மக்களது சுயநிர்ணயத்தை மறுதலிக்கும் விதமாக சிங்களப் பேரினவாதம் என்னென்ன கொடுமைகளைப் புரிந்ததோ அத்தனை கொடுமைகளையும் அல்லது அதற்கும் அதிகமானகொடுமைகளை தமிழ்ப்பேரினவாதம் முஸ்லிம்களுக்குச் செய்து கொண்டிருக்கிறது. என்பது தான் யதார்த்தம்.

இனவாதம், பயங்கரவாதம் என்பன வார்த்தையாகவோ வாதமாகவோ ஆயுதமாகவோ எந்தக்காலத்தில் எந்த இடத்தில் நடை பெற்றாலும் அது வெறும் தற்காலிக வானவில் வெற்றியையே காட்டியதேயன்றி ஜெயித்ததாக வரலாறில்லை. காலடியிலோ காலங்கடந்தோ அது அழிவையும் விரோதத்தையும் தான் விட்டுச் சென்றிருக்கிறது. அதன் ஒரு உதாரனத்தைத்தான் வெள்ளமுள்ளிவாய்க்காலின் ஓரத்தில் இந்த உலகம் கண்டது. முன்னாள் ஆயுதப் போராளியும் இந்நாள் அரசியல்பிரமுகருமாகிய உங்களுக்கு இந்த யதார்த்தம் விளங்காத ஒன்றல்ல.

இவையெல்லாம் அவசியம் ஒரு புறம் இருக்க, முஸ்லிம்கள, சிங்கள மற்றும் தமிழ் பேரினவாதங்களின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டதா இல்லையா?

முஸ்லிம்கள் இந்நாட்டின் சிறுபான்மைச் சமுகமல்லவா?

முஸ்லிம்களது சுயநிர்ணயம் இருபேரினவாதங்களினாலும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறதா இல்லையா?

தமிழ் மக்கள் தம் சுயநிர்ணயத்துக்காக முன்வைக்கும் நியாயங்கள் போன்று அத்தனை நியாயங்களும் முஸ்லிம்களுக்கும் உள்ளனவல்லவா?

திரு.சுரெஸ்பிரேமச்சந்திரன் அவர்களே இப்போது சொல்லுங்கள். இலங்கை இனப்பிரச்சினைக்கு இருபரிமானமா இல்லை முப்பரிமானமா?

புலிகள் இல்லா இச்சூழ்நிலையில் நீங்கள் நியாயத்தையும் நீதியையும் புரிந்து கொண்டு தைரியமாகச்சொல்லலாம் ‘இலங்கை இனப்பிரச்சினை முப்பரிமானங்கொண்டது. ஆதலால் இது முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பேசித்தீர்க்கப்பட்டாக வேண்டியது. அதுவே நீடித்த மற்றும் நிலைத்த சமாதானத்தின் அத்திவாரமயிருக்கும்’ என்ற உண்மையை உரையுங்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினை இன்றைக்கும் தீர்ந்தபாடில்லாமல் இருப்பதற்கு சிறுபான்மை இனங்கள் சார்பாக இரண்டு பெரிய காரணங்களை முன்வைக்க முடியும்.

1. மேட்டுக்குடியின் பிடிக்குள் சிக்கிய புலிகள் என்ற ஒரு ஆயுத இயக்கத்தின் சாத்தியமேயில்லாத தனிநாட்டக்கோரிக்கையானதுஇகுறித்தவோர் தீர்வொன்றிற்கு வந்து அதில்இருந்து மேலும் முன்னேறிவந்திருக்கக்கூடிய பல சந்தர்ப்பங்களை வீணாக்கியது.

2.முஸ்லிம்கள் ஒரு குழு. அவர்கள் தமிழ் பேசும் மக்கள.; அவர்களுக்கென்று பிரச்சினையில்லை என முழப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்க் முற்படுகின்றமை.

பேச்சு வார்த்தையில் ஒருமுடிவுக்கு வந்திருக்கவேண்டிய சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பு கோட்டை விட்டது போன்று முஸ்லிம் தரப்பும் பேச்சு வார்த்தையில் தனித்தரப்பாக பங்கு பற்றியிருக்க வேண்டிய பல சந்தர்ப்பங்கள் அமைச்சுப்பதவிகளால் கோட்டைவிட்டுவரும் கேவலமும் துர்ப்பாக்கியமும் அட்டமத்துச்சனியாய் முஸ்லிம்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆட்சிசெய்ய இனிப் பிராப்தமேயில்லை என்றிருந்த கையறு நிலையில் 2002ல் முஸ்லிம்களது வாக்குப்பலம் பயன்பட்டபோது அதற்குப்பகரமாக தனித்தரப்பு கேட்டுப்பெறப்படும் என ஒட்டுமொத்த வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் வாயை ஆவென்று வைத்துக்கொண்டிருந்த போது தன்கையே வாய்க்குள் புளுதி மண்ணள்ளிப்போட்டது. ஆமாம் வாக்குப்பலம் விலைபேசப்பட்டுப்போனது. பகரமாக அமைச்சுப்பதவியும் அரசதரப்பில் பேச்சுவார்த்தைச் சுற்றுலாவும் துரதிஸ்டமாய் வந்து வாய்த்தது.

இவ்வாறு முஸ்லிம்களை நோக்கி அரசீயல் துரதிஸ்டங்களின் துரத்தல் அல்லது இறைவனின் சோதனை அல்லது தண்டனை தொடர்வது ஒருபுறமிருக்கஇ

திரு.சுரெஸ்பிரேமச்சந்திரன் அவர்களே முஸ்லிம்கள் படுகாயப் படுத்தப்பட்டிருக்க பேச்சுவார்த்தை மருந்தை உங்களுக்குள் மாத்திரம் பங்குவைக்க முற்படுவது அர்த்தமற்றது அநீதியானது.மனிதாபிமானமற்றது.(காயம் உங்களாலும் தான் என்பதை நினைவிற் கொள்க) அது மாத்திரம் அல்லாது பேச்சுவார்;ததையானது அதிகாரப்பகிர்வை அடிப்படையாகக்கொண்டது.அத்தகைய சந்தர்ப்பங்களில் அவ்விடத்தில் முஸ்லிம்கள் சார்பாக பிரச்சினைக்குரிய மண்ணின் வாழ்வையும் வளத்தையும் பிறந்து வாழ்ந்து அறிந்து அனுபவித்த முஸ்லிம் புத்திஜீவிகள் இருந்தாக வேண்டும். அதிலும ;குறிப்பாக தமிழர் தரப்பு கலந்து கொள்ளும் அனைத்துச்சுற்று பேச்சுவார்த்தையிலும் முஸ்லிம் தரப்பும் தவறாது விளிப்புடன் கலந்து கொள்ள வேண்டும். காரணம் இரண்டு.

1.தமிழ் தரப்பு தமிழ் பேசும் மக்கள் என்றபாங்கில் (முஸ்லிம்களையும் உள்ளடக்கி மடக்கி)அதிகாரப்பகிர்வையும் ஆள்புல எல்லையையும் தனது நோக்கங்களுக்கு ஏற்ப தீர்மாணித்து விடக்குடிய ஆபத்து வெளிப்படையாகவே தெரிகின்றமை.

2.பேச்சுவார்த்தையில் எடுக்கின்ற தீர்மாணங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டின் தீர்மாணம் எடுக்கின்ற போதே பல இருதரப்பு விட்டுக்கொடுப்புகளும் சமரசங்களும் செய்து கொள்ளப்பட வேண்டும்.அதன் பொருட்டு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பின் பிரசன்னம் இன்றியமையாதது.

எனவே இந்த நியாயமான யதார்த்தங்களைப்புரிந்து கொள்ளும் உளநிலை வாய்க்கப் பெறும் பட்சத்தில் இனி

தமிழர் பேசுகையில் முஸ்லிம்களுக்கு என்னவேலை

முஸ்லிம்கள் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து குழப்ப வேண்டும்

தனித்தரப்புக்கேட்க எதனை இழந்தீர்கள்

நாங்கள் கோரிக்கை வைக்கும் கோறும் ஏன் முஸ்லிம்களும் கோரிக்கை வைக்கின்றீர்கள்

லேட்டஸ்ட்டாக-உங்கள்

உரிமைதேவையெனில் போராடுங்கள்’

போன்ற பேரினவாதக்கூச்சல்கள் அர்த்தமற்றவை. அடக்குமறைசார்ந்தவை என்பதை திரு சுரெஸ்பிரேமச்சந்திரன் அவர்களே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

முஸ்லிம்களை ஒருதரப்பாக மனங்கொள்ளாத பேச்சு வார்த்தை இன்னும் ஐம்பதோ நூறு ஆண்டுகளோ இழுபட்டுத்திரிந்தாலும் நிரந்தர அமைதி சுபீட்சம் என்பது இலங்கைக்கு பகற்கனவு தான். முஸ்லிம்களை புறந்தள்ளிய தீர்வு என்றைக்குமே; குறைப்பிரசவம் தான். அதற்கு அற்ப ஆயுள் தான்.

எனவே வீண் வரட்டுத்தனங்கள் வேண்டாம். மாறாக யதார்த்தங்களை ஏற்கும் உளநிலையை வளர்ப்போம்

முஸ்லிம் தரப்பிலும் தமிழர் தரப்பிலும் சொகுசுக்கான பிச்சைக்காரப் புண்வளர்த்தல் இனிமேலும் வேண்டாம். போதும் இனிமேலாவது வாக்களித்த மக்கள் சொகுசாக வாழ வழிவிடப்படப் பிரார்த்திப்போம்.

(மூதூர் முஹம்மதலி ஜின்னா)

கருத்துகள் இல்லை: