வியாழன், 13 அக்டோபர், 2011

திருச்சி இடைத் தேர்தல்- இதுவரை 15% வாக்குப் பதிவு


Voters
: திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு மந்தமாக தொடங்கி நடந்து வருகிறது. 10 மணி நேர நிலவரப்படி 15 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. ஓட்டுப் பதிவு பல வாக்குச் சாவடிகளில் மந்த கதியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி, திமுக சார்பில் கே.என்.நேரு உள்பட மொத்தம் 16 வேட்பாளர்களுடன் இடைத் தேர்தல் களம் களை கட்டியிருந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் என எந்த பிற அரசியல் கட்சியும் பங்கேற்கவில்லை.

அனல் பறக்க நடந்த தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

காலை தொடங்கிய வாக்குப் பதிவு சற்று மந்த கதியிலேயே போய்க் கொண்டுள்ளது. இதுவரை 15 சதவீதத்திற்கும் சற்று அதிகமான அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத தெரிகிறது.

உறையூரில், கிழக்கு மாநகராட்சி அரசுப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வேறு இயந்திரம் பொருத்தப்பட்டு பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்தது. இதனால் சற்று நேரம் தாமதம் ஆனது.

திமுகவேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மக்கள் மன்றம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வராஜும் வாக்களித்தார்.

திருச்சி மேற்குத் தொகுதியில் மொத்தம் 2,08,247 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 1,02,924 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 1,05,497 பேர். 6 திருநங்கைகளும் உள்ளனர்.

மொத்தம் 240 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்காக அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கெல்லாம் 6 கம்பெனி துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

20ம் தேதி இங்கு பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு இல்லை

அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதிக்கு இந்த தொகுதியில் ஓட்டு இல்லை என்பதால் அவர் இன்று ஓட்டளிக்கவில்லை. பரஞ்சோதி, ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்தவர். அங்குதான் அவரது வீடும், ஓட்டும் உள்ளது. இதனால்தான் அவரால் அவர் போட்டியிடும் திருச்சி மேற்குத் தொகுதியில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.

தொகுதிக்குப் பக்கத்தில் இருந்தும் ஓட்டு இல்லாததால் போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் பரஞ்சோதி.

கருத்துகள் இல்லை: