ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் விடுதலை!

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டு வந்த மேலும் ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் 306 பேர் நேற்று சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை மண்டபத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வைபவத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர, பிரதி அமைச்சர் விஜித விஜிதமுனி டி சொய்சா, அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஷ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க ஆகி;யோடன் பல முக்கிய இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விடுதலை செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளைப் பெற்றோரிடம் கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் குணசேகர, கிளர்ச்சியில் முன்னர் ஈடுபட்டு பின்னர் தமது கிளர்ச்சி நடவடிக்கைகளைக் கைவிட்டு சமூகத்துடன் இணைந்த ஜேவிபியினர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்.

இவர்களைப் போன்று இன்று விடுதலையாகும் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து எதிர்வரும் வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர்களான புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகள் திறமைசாலிகள். தமது திறமைகளை அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சமூகத்திற்குப் பயன்படத்தக்க வகையில் பிரயோகிக்க வேண்டும்.

முன்னாள் புலி உறுப்பினர்களான புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு இதுவிடயத்தில் நான் வேண்டிய உதவிகளையும், ஒத்தாசைகளையும் செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: