வெள்ளி, 29 அக்டோபர், 2010

பிரபாகரனின் சகோதர, சகோதரிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேவலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதர,சகோதரிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.தற்போது வல்வெட்டித்துரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாவை பார்வையிடுவதற்காக சிவாஜிலிங்கம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

பார்வதி அம்மாள் தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு மிகவும் விரும்புவதாகவும் அவரது உடல் நிலை ஸ்திரமின்றி காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பார்வதி அம்மாள் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாயின் உடல் நிலையை நேரில் பார்வையிடுமாறு பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.பிரபாகரனின் சகோதரியான வினோதினி ராஜேந்திரன் கனடாவிலும், மற்றுமொரு சகோதரியான ஜெகதீஸ்வரி மதியபாலன் சென்னையிலும், சகோதரர் மனோகரன் டென்மார்க்கிலும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வசிக்கும் வினோதினி ராஜேந்திரனுடன் வாழ்வதற்காக பார்வதி அம்மாள் பல தடவைகள் கனேடிய வீசா கோரிய போதிலும் அந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

குறைந்தபட்சம் பேரப்பிள்ளைகளாவது அனுப்பி வைக்குமாறு சிவாஜிலிங்கம் பிரபாகரனின் சகோதர சகோதரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வினோதினி ராஜேந்திரனை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு தாம் இதுவரையில் இலங்கை அரசாங்கத்திடம் கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: