சனி, 30 அக்டோபர், 2010

போலி சான்றிதழ்களை வழங்கிய கல்வி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

இது தொடர்பான இணையத்தளத்திலும் தேடினோம். ஆனால் இப்படி ஒரு நிறுவனத்தை காண முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜராகும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரங்கன் தேவராஜன்  கூறினார்.
ஐக்கிய இராச்சியத்தின் பிரபல கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டங்களை வைத்து மேற்கு நாடுகளில் வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருவதாக மாணவர்களை நம்ப வைத்து பல மில்லியன் ரூபாய்களை ஏமாற்றிப் பெற்ற யாழ். குடாநாட்டில் உள்ள கல்வி நிறுவனமொன்று சட்டத்தின் பார்வைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

யாழ்பாணம், சங்காணை ஆகிய இடங்களில் உள்ள தனது கிளைகளில் இந்த நிறுவனம் ஒரு வருட டிப்ளோமா நெறியை நடத்தி வந்துள்ளது. இந்த பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு அயர்லாந்து சர்வதேச பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிப்ளோமா சான்றிதழ் "கேம்பிறிட்ஜ் அசோஸியேசன் மனேஜர்ஸ்" எனும் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தில் இல்லை என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டிப்ளோமா சான்றிதழ்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் போலியானவை என்று நிராகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரங்கன் தேவராஜன் ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பான இணையத்தளத்திலும் தேடினோம். ஆனால் இப்படி ஒரு நிறுவனத்தை காண முடியவில்லை என ரங்கன் தேவராஜன் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வதிவிட விஸாவும் வேலை வாய்ப்பும் பெற்றுத் தருவதாக இந்த போலி கல்வி நிறுவனத்தினால் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் உள்ளூர் பத்திரிகைகளிலும் விளம்பரங்களையும் செய்துள்ளனர். அந்த பத்திரிகைகள் இந்த நிறுவனங்களை பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டன என்றார் அவர்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாண நீதவான் முன் வந்த போது உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டது.

இவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாமென நீதிமன்றத்தால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழ் மிரர்

கருத்துகள் இல்லை: