திங்கள், 31 மே, 2010

மங்கையர்க்கரசி மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில்




மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் சுதந்திரமானதொரு நடமாட்ட நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என   மங்கையர்க்கரசி தெரிவித்தார்.
இருப்பினும் இனங்களுக்கிடையே சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு மேலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவருமான அமரர் அமிர்தலிங்கத்தின் பாரியாரான மங்கையர்க்கரசி தெரிவித்தார்.
நாட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முயற்சி பாராட்டுக்குரியது என்வும் அவர் சுட்டிக்காட்டினார்.
கேகாலை, அம்பலம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள, அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரான டீ.ஏ. நிஸ்ஸங்க என்பவரின் வீட்டுக்கு மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் அவரது புதல்வரும் விஜயம் செய்திருந்தனர்.
விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இருவரும், அமரர் அமிர்தலிங்கத்தின் மெய்ப் பாதுகாவலருக்கு நன்றி பாராட்டும் நோக்கில் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். 21 ஆண்டுகளின் பின்னர் குறித்த மெய்ப் பாதுகாவலரை சந்தித்த அமிர்தலிங்கம் குடும்பத்தார், உணர்வுபூர்வமாக தமது நன்றியை தெரிவித்தனர்.
இதன்போது ஊடகவியளாலர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.  இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மங்கையர்க்கரசி, நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான திறமை ஜனாதிபதியிடம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
வயது முதிர்ந்து விட்டதால் அரசியல் விவகாரங்களில் தமக்கு எவ்வித நாட்டமும் கிடையாது எனவும் அரசியலினால் தமது குடும்பம் சொல்லொனா துயரங்களை அடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரசியலில் பிரவேசிப்பதன் மூலம் மட்டுந்தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றில்லை என அமரர் அமிர்தலிங்கத்தின் புதல்வரும் வைத்தியருமான பகீரதன் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியலில் ஈடுபடும் எவ்வித நோக்கமும் தமக்குக் கிடையாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி புல்லர்ஸ் பிளேஸ் கட்டமொன்றில் அமிர்தலிங்கம் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த மூன்று ஆயுததாரிகளை மேற்படி மெய்ப்பாதுகாவளரான நிஸ்ஸங்க, சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: