திங்கள், 25 ஜூலை, 2011

வீரபாண்டி ஆறுமுகம் உதவியாளர் நடேசன் தற்கொலை

சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உதவியாளர் நடேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் நடேசன் (60). இவர் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரபாண்டி ஆறுமுகம் மீது நில அபகரிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் நடேசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் பல முக்கிய தகவல்களை போலீசாரிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த திமுக பிரமுகர்கள் சிலர் நடேசனை அவரது வீட்டிற்கே சென்று மிரட்டியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்து போன நடேசன் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

நடேசன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணிகண்டன் என்பவர் சேலம் கமிஷனருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: