ஞாயிறு, 23 டிசம்பர், 2018

கன்னித்தன்மை.. பெண்களுக்கு தொடரும் கொடுமைகள்!

பாடகி : கன்னித்தன்மை பரிசோதனை : tamil.boldsky.com- aashika: சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கூடிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நம்மையெல்லாம் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கோவிலில் வைத்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் இந்த சமூகத்தில் இருந்து கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று இன்னும் எத்தனை நாளுக்குத் தான் கூச்சலிடப்போகிறோம் என்று தெரியவில்லை
வயது வித்யாசங்களின்றி அனைத்து இடங்களிலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பெண்களுக்கு வரதட்சனை என்ற மிகப்பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்கள்.அத்தனையும் கடந்து வரும் பெண்களையும் இந்த சமூகம் சும்மா விடுவதில்லை அவளது நடத்தையின் மீது சந்தேக கனலை தூக்கி வீசுகிறது. நாக்கூசும் வார்த்தைகளால் அவர்களை தாக்குவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
கௌரவம், கலாச்சாரம் ஆகியவற்றையெல்லாம் பெண்ணின் யோனிக்குள் வைத்ததாலோ என்னவோ இன்னமும் பல இடங்களில் பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பினை இரும்புக்கம்பியினால் தைத்து விடும் கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதைத் தவிர இன்னொரு அக்கிரமம் என்ன தெரியுமா? பெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதிப்பது. இந்த பெயரில் நடக்கிற அநியாங்களும் ஏராளம்.


பல சமூகங்களில் இன்றும் இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. திருமணம் முடித்த தம்பதிகள் முதலிரவுக்கு செல்லும் அறைக்கு வெள்ளை நிற போர்வையை கொடுத்து அனுப்புகிறார்கள். அதிலேயே அவர்கள் உறவு கொள்ள வேண்டும். அந்த போர்வையில் ரத்தத் துளிகள் இருக்க வேண்டுமாம். அப்படியிருந்தால் பெண் கன்னித்தன்மை உடைவள் என்று அர்த்தம் இதே ரத்த துளிகள் இல்லையென்றால் திருமணத்திற்கு முன்பே இந்த பெண் வேறு யாருடனோ உறவு கொண்டிருக்கிறாள் என்று முடிவு செய்து புகுந்து வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
எங்கள் மானத்தை வாங்கி விட்டாய் என்று சொல்லி பிறந்த வீட்டினரும் இந்த பெண்ணை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட கன்னித்தன்மை பரிசோதனையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் கதையை பகிர்ந்து கொள்கிறார்.


பாடகி :

என் வாழ்க்கை இப்படி தலைகீழாக திரும்பும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆம், எல்லாம் மாறிவிட்டது அந்த சம்பவத்திற்கு பிறகு. என் பெயர் நீடா ஆஃப்கானிஸ்தானில் வசிக்கிற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் நான்.
நாடக குழுவில் பாடகியாக இருக்கிறேன். எனக்கு பள்ளி சென்று வருவதற்கே பல நேரங்களில் பெற்றோரால் காசு கொடுக்க முடியாது. சில நேரத்தில் மதிய உணவை சாப்பிடாமல் அந்த காசில் வீடு வந்து சேரு என்று சொல்வார் என் அம்மா.



எனக்கு ஏன்? :

என் வகுப்பறையிலேயே சற்று வசதியான பிள்ளைகளும் வருவார்கள். எனக்கு ஏன் இந்த நிலைமை? இந்த வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் பள்ளிப் பருவத்திலேயே என்னுள் எழத் துவங்கிவிட்டது. படிப்பினைத் தாண்டி என் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். இன்றைக்கு என் குடும்பம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு நான் தான் காரணமா என்று யோசிக்கிறேன். அன்றைக்கு அப்படியென்ன பெரிய தவறு செய்துவிட்டேன்.
கையில் காசில்லை, இருட்டி விட்டது லிஃப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்தேன். இது தவறா?


அன்றைய இரவு :

அன்று நாடகக்குழுவில் ப்ராக்டிஸ் நடந்து கொண்டிருந்தது மாலை நெருங்க ஆரம்பிக்கும் போதிருந்தே இங்கிருந்து எப்படி வீட்டிற்கு செல்வது என்ற பதட்டம் என்னுள் எழ ஆரம்பித்து விட்டது. முழு நிகழ்ச்சியின் ரிகர்சலும் முடிய இரவாகிவிட்டது. அங்கிருந்து பேருந்து நிலையம் வெகு தொலைவு செல்ல வேண்டும். நடந்தே வீட்டிற்கு செல்லலாம் என்றால் வீட்டிற்கு செல்ல இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக நடக்க வேண்டும்.
என்னுடன் உடன் பணியாற்றும் ஒரு தோழி இணைந்து கொண்டாள். நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்லாமல் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்த நாடகக்குழுவினர் விவரத்தை அறிந்தார்கள். அப்படியென்றால் ஒன்று செய் இந்த காரில் இருவரையும் இறக்கிவிட்டு பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று ஐடியா கூறினார் ஒருவர்.



நானும் தோழியும் உடன் பணியாற்றுகிற இரண்டு ஆண் நபர்களுடன் வீடு வந்து சேர்ந்தோம். அப்பாடா ஒரு வழியாக இன்றைக்கு வீடு வந்து சேர்ந்தோமே என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
நானும் என் தோழியும் எங்களை வீடு வரை வந்து இறக்கிவிட்டுச் சென்ற நபர்களுடன் உறவு கொண்டதாக வதந்தி பரவியது. அதனால் தான் இரவு தாமதமாக வந்தார்கள் என்றும் ஆதாரம் கிளப்பினார்கள்.


பரிசோதனை :

விஷயம் ஊரெல்லாம் பரவியது. நீடாவிடமும் அவளது தோழியிடமும் கிடுக்குப்பிடி விசாரணைகள் நடைப்பெற்றன. செய்யாத தவறுக்கு பரிசோதனை எல்லாம் செய்தார்கள். இறுதியாக மருத்துவர்கள் நீடாவின் கன்னித்தன்மை கழியவில்லை என்று சான்றிதழ் கொடுக்க விஷயம் சுமுகமாக முடிந்து விடும் என்று நினைத்தார்கள். ஆனால் நீடா இந்த விஷயத்தை அப்படியேவிடவில்லை தனக்கு எதிராக நடந்த அநீதிக்கு நியாயம் வேண்டி இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆஃப்கானிஸ்தானின் சுப்ரீம் கோர்டில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கம் இன்னமும் நாட்டின் பெரிய நகரமான பாமியானில் இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது என்பதே அப்போது தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது. இதைத் தாண்டி பல உண்மைகளும் வெளி வந்திருக்கிறது.

மருத்துவ அறை :

இது குறித்து ஒரு பெண் மருத்துவர் கூறுகையில் விர்ஜினிட்டி டெஸ்ட் எடுப்பது என்பது இங்கு மிக சாதரணமானது. ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அதற்காக அழைத்து வரப்படுவார்கள் அந்த டெஸ்ட் செய்ய தனி அறை வசதி கூட பல மருத்துவமனைகளில் இருப்பதில்லை.சில நேரங்களில் ஒரு பெண்ணிடமே பல முறை டெஸ்ட் செய்யச் சொல்லி கேட்பார்கள்.
இது அந்தப் பெண்களின் ஒப்புதல் இல்லாமலேயே நடத்தப்படுகிறது என்றிருக்கிறார்.

அறிவியல் :

அறிவியல்படி இந்த கன்னித்தன்மை என்ற வார்த்தையே தவறானது என்கிறார்கள். உலக சுகாதார நிறுவனமும் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியலின்படி இது உண்மையில்லை என்பதால் இந்த நடைமுறையை தடை செய்ய வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு பெரும் அவமானம் ஏற்படுகிறது என்று புகார் எழுந்தது.
தேவையற்ற கற்பிதங்களால் பெண்களின் எதிர்காலம் கேள்விகுறியாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

என்ன நடந்தது :

நீங்கள் எந்த தவறும் செய்யாத போது நீங்கள் கூனிக்குறுகிற அளவிற்கு ஒரு தண்டனை கொடுக்கப்பட்டால் எப்படி உணர்வீர்கள்? அதே போன்றதொரு உணர்ச்சியில் தான் நானிருக்கிறேன். அந்த சம்பவம் நடந்து இரண்டாடுகளுக்கும் மேலாகிவிட்டது ஆனால் இன்னமும் குற்ற உணர்ச்சியில் நான் எதுவுமே செய்யாத போது எனக்கு ஏன் இந்த தண்டனை என்று தினம் தினம் அழுது கொண்டிருக்கிறேன்.
இது தண்டனையல்ல நீ தவறு செய்துவிட்டாயா என்று பரிசோதித்தோம் அவ்வளவு தான் இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை என்று சிலர் என்னிடம் சமாதனம் என்ற பெயரில் வக்கிரமாக பேசுகிறார்கள். எனது கன்னித்தன்மையை பற்றி கேள்வியெழுப்ப இவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது .


என்ன நினைப்பார்கள் ? :

இந்த சம்பவம் ஊரெல்லாம் தெரிந்து விட்ட பிறகு யாரைப் பார்த்தாலும் எனக்கு பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. அதிக நேரம் தனிமையில் தான் இருந்தேன். பள்ளியில் இருந்து நின்றுவிட்டேன். அங்கே இதுப் பற்றி என்னிடம் கேள்வியெழுப்பினாள் என்ன பதில் சொல்வது. நான் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவி எல்லா ஆசிரியர்களுக்கும் என்னைப் பிடிக்கும்.
இப்படியான ஒரு டெஸ்ட் எடுக்கப்பட்டது என்று தெரிந்ததும் ஒவ்வொரு ஆசிரியரும் என்னைப் பற்றிய அபிப்ராயங்களை மாற்றிக் கொண்டார்கள். என்னுடன் மிகச்சிறந்த நண்பர்களாக இருந்தவர்கள் கூட சற்று விலக ஆரம்பித்தார்கள்.
என்னைச் சுற்றி எல்லாரும் இதுவரை நேசித்த யாவரும் என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக உணர்ந்தேன். செய்யாத தவறுக்கு எதற்கு இவ்வளவு பெரிய தண்டனை?


குடும்பம் :

கன்னித்தன்மை பரிசோதனை,கோர்ட்,வழக்கு, விசாரணை என்று எங்கள் குடும்ப மானத்தையே வாங்கிவிட்டாய் உன்னால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று அம்மா அடிக்கடி சொல்வார். என் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


எதிர்காலம் :

இந்த பரிசோதனை ஆண்களை எள்ளலவும் பாதிப்பதில்லை மாறாக பெண்களின் வாழ்க்கையைத் தான் சிதைக்கிறது. இதற்கு எதிராக தொடர்ந்து நான் போராட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
இந்த நாடகத்துறையில் நான் சிறந்து விளங்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற கனவு என்னுள் இருக்கிறது அதற்கான திட்டங்களும் இருக்கிறது முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆனால் அதை யார் எங்கிருந்து வந்து சிதைப்பார்கள் என்று எனக்கு தெரியாது..

கருத்துகள் இல்லை: