ஞாயிறு, 23 டிசம்பர், 2018

கிரண் பேடிக்கு எதிராக டெல்லியில் புதுவை அரசு போராட்டம் .. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

மின்னம்பலம் :புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும்,
முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதலின் உச்சகட்டமாக, வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல்வர் நாராயாணசாமி டெல்லியில் தனது அமைச்சர்கள் சகிதம் போராட்டம் நடத்த இருக்கிறார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜகவின் நியமன எம்.எல்.ஏ.க்கள், கிரண்பேடியின் துறை ரீதியான ஆய்வு என்று முதல்வர் நாராயணசாமியோடு தொடர்ந்து முரண்பட்டு வருகிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.
இதுகுறித்து கடந்த புதன் கிழமை இரவு புதுச்சேரியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார் நாராயணசாமி. அந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக, ரங்கசாமியின் புதுவை மாநில காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் பங்கேற்றனர்.

இந்த பின்னணியில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் இன்று (டிசம்பர் 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“கடந்த புதன் கிழமையன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு நடத்தும் விதம் குறித்து கவலையோடு விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் அளவுக்கு மீறிய தலையீடுகளால், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத அளவுக்கு மாநில அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
இத்தகைய நிலையைக் கண்டித்தும் புதுச்சேரியின் சுய உரிமையை நிலைநாட்டவும் டெல்லியில் ஜனவரி 4 ஆம் தேதி புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடைபெற இருக்கிறது.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸின் தோழமைக் கட்சிகளான திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மாணவர் அமைப்புகள் கலந்துகொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: