ஞாயிறு, 27 மே, 2018

லண்டன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுப வீரபாண்டியனை தடைசெய்த தமிழ் குண்டர்கள்.

லண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஏன்
கலந்து கொள்ளவில்லை?  -சுப. வீரபாண்டியன்
நீதி கேட்டு எழுந்த தூத்துக்குடி மக்களின் மீது நடத்தப்பட்ட நியாயமற்ற துப்பாக்கிச் சூடும், இறந்துபோன 13 பேரின் உயிர்களும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலும், அயர்லாந்திலும், தூத்துக்குடிப் படுகொலைகளுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
26.05.2018 மாலை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, தமிழ்த் தோழமை இயக்கம் (Tamil Solidarity), பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம் ஆகியன முன்னின்று நடத்தின. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இயலுமா என்று அதன் அமைப்பாளர்கள் என்னிடம் கேட்டனர். நான் தற்போது லீட்ஸ் (UK) என்னும் நகரத்தில் உள்ளேன். அங்கிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேரப் பயணத்தில் லண்டன் சென்றுவிட முடியும். எனவே உறுதியாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் செய்தியை நானும், அமைப்பாளர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தோம். என்னுடன் சேர்ந்து லீட்ஸ் நகரிலிருந்தும் ஏழெட்டுப் பேர் கலந்துகொள்ள வருவதாகக் கூறினர்.

இந்நிலையில், ஒரு சிலர் அமைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, என் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களும் தமிழர்கள்தான். தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியோடு தொடர்புடையவர்கள். ஆனால் அந்தக் கட்சி சார்பில் எதிர்ப்பத் தெரிவிப்பதாக வெளிப்படையாக அவர்கள் கூறவில்லை. "அவர் வரக்கூடாது என்றும், வந்தால் அவமானப்படுத்துவோம்" என்றும் கூறியுள்ளனர்.
அமைப்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துக் கூறினர். "நீங்கள் வந்தால் அது திமுக சார்பு அபார்ப்பாட்டம் போல ஆகிவிடும் என்கின்றனர். எனவே நீங்கள் ஆர்ப்பாட்டத்தில் எதுவும் பேச வேண்டாம்" என்பதுபோல் கூறினார். நான் முதல் வரிசையில் நிற்பதையோ, ஊடகங்களுக்கு நேர்காணல் தருவதையோ அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.
நான் எப்போதுமே முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசைக்கு வருபவன் இல்லை. அழைத்தவர்கள் கேட்டுக் கொண்டாலன்றி, கூட்டங்களில் பேச வாய்ப்பு வேண்டும் என்று கேட்டவனும் இல்லை. எனினும் நான் எந்த இடத்தில் நிற்க வேண்டும், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கலாமா கூடாதா என்பதையெல்லாம் வேறு யாரும் முடிவு செய்ய முடியாது. அதே போல, எங்கும் எப்போதும் திமுக வின் குரலாக ஒலிக்கும் விருப்பமும், உரிமையும் என்னுடையது. அதனையெல்லாம் மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது.
படுகொலை செய்யப்பட தமிழர்களுக்காக நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கூட இத்தனை உள்ளூர் அரசியலைக் கலக்கும் குருகிய மனப்பான்மையினர் வளர்வது எவ்வளவு பெரிய ஒற்றுமைக் கேடு என்பதை உணர வேண்டிய நிலையில் உள்ளோம். இருப்பினும், இந்தச் சூழலில் நமக்குள் பிளவு இருப்பதுபோல் ஒரு செய்தி வெளியாவது நல்லதில்லை என்று கருதி, நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்து விடலாம் என்று கருதினேன். அதனை அமைப்பாளர்களிடம் கூறிவிட்டேன்.
அடுத்தநாள் லண்டன் நண்பர்கள் பலர் தொலைபேசி, |"நீங்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம், பார்த்துக் கொள்ளலாம்" என்றனர். அது மட்டுமின்றி, நீங்கள் வரவில்லையானால், தங்களுக்குப் பயந்து சுபவீ கலந்து கொள்ளவில்லை என்று பேசித் திரிவார்கள், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்" என்றனர்.
"இவர்களிடம் மாவீரன் என்று சான்றிதழ் பெற்று எனக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. என்னைப் பொருத்தளவு, தூத்துக்குடிப் படுகொலைகளை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம்தான் முதன்மையானது. என் பங்கேற்பினால் அது திசை திரும்புமானால், உயிர்த் தியாகம் செய்த மக்களைக் கொச்சைப்படுத்துவதாக அது அமையும். எனவே நான் கலந்து கொள்ளவில்லை" என்று கூறிவிட்டேன்.
எனினும் இரண்டு செய்திகளை இங்கு நான் பதிவிட வேண்டியுள்ளது. யாராயிருப்பினும் "நாம் தமிழர்" என்ற உணர்வு பெருமைக்கு உரியதே. ஆனால் நாங்கள் மட்டுமே தமிழர் என்னும் நிலைப்பாடு, தமிழின ஒற்றுமைக்கு எதிரானதும், அநாகரிகமானதும் ஆகும்.
இரண்டாவது, தங்களின் குறுகிய மனநிலையின் மூலம், திமுக வை மறைத்துவிட முடியும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்,
ஆதவன் மறைவ தில்லை."

கருத்துகள் இல்லை: